
தேனிலவு சென்ற புதுமண தம்பதி மேகாலயாவில் காணாமல் போன சம்பவத்தில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி- சோனம் ஆகியோருக்கு கடந்த மே 11ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக கடந்த மே 20ஆம் தேதி மேகாலயாவுக்குச் சென்ற இவர்கள், மே 22ஆம் தேதி திடீரென்று காணாமல் போனார்கள். இது குறித்து அவர்களுடைய குடும்பத்தினர் போலீசில் புகார் அளிக்கவே, அவர்களை போலீசார் தீவிரமாக தேடினர். அந்த தேடுதல் வேட்டையில், மே 24ஆம் தேதி தம்பதி வாடகைக்கு எடுத்த ஸ்கூட்டர், சோஹ்ராரிம் கிராமத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. காணாமல் போன தம்பதிகளை தேட அவர்களுடைய உறவினர்கள் விமானம் மூலம் மேகாலயாவுக்கு வந்து போலீசுடன் தீவிரமாக தேடினர்.
தம்பதி காணாமல் போன 10 நாட்களுக்குப் பிறகு ஜூன் 2ஆம் தேதி, அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த போலீசார், அவரின் மொபைல் போனை மீட்டனர். மேலும், சம்பவ இடத்தில் ஒரு பெண்ணின் சட்டை, மருந்துகள், ஒரு மொபைலின் எல்.சி.டி திரையின் ஒரு பகுதி மற்றும் ஒரு ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
ராஜா ரகுவன்ஷியின் உடலைக் கண்டுபிடித்த போதிலும், அவரது மனைவி சோனம் என்ன ஆனார்? என்ற கேள்வி எழுந்தது. அவர் எங்கு இருக்கிறார்? அவரை யாரேனும் கடத்திச் சென்றுள்ளனரா? என்று கேள்விகள் போலீசிடம் எழுந்திருந்தது. 11 நாட்களுக்கு மேலாக சோனமை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்த அதே வேளையில், தம்பதியினர் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தம்பதியரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும், இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், ராஜா ரகுவன்ஷியின் மனைவியான சோனம் கூலிப்படைகளை வைத்து கணவரை கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தம்பதியினர் காணாமல் போன நாளில் அடையாளம் தெரியாத மூன்று ஆண்களுடன் சோனம் காணப்பட்டதாக உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் முன்னதாக போலீசாரிடம் தெரிவித்திருந்தார். அதன்படி, சோனமை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் இருந்து தனது குடும்பத்தினருக்கு சோனம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டதாக அவரது குடும்பத்தினர் இந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள உள்ளூர் போலீசாருடன் இணைந்து சோனமை இந்தூர் போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.
24 வயதான சோனமுக்கு, வேறு ராஜ் குஷ்வாஹா என்ற நபருடன் உறவு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தனது கணவர் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய சோனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, மேகாலயாவின் அழகிய சோஹ்ரா பகுதிக்கு தேனிலவு சென்றிருந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கொலையாளிகளை அமர்த்தி தனது கணவர் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்துள்ளதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதனை தொடர்ந்து, சோனமை போலீசார் கைது செய்து காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், சோனம் மீது சுமத்தப்பட்டுள்ள கொலை குற்றச்சாட்டை அவரது தந்தை மறுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சோனமின் தந்தை தேவி சிங், ‘எனது மகள் அப்பாவி. இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். மேகாலயா அரசு ஆரம்பத்திலிருந்தே பொய் சொல்லி வருகிறது. சிபிஐ விசாரணை கோருவதற்காக மத்தியப் பிரதேச முதல்வரையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தோம். மேகாலயா காவல்துறை பொய்யான கதைகளை புனைந்து சொல்கிறது. சிபிஐ விசாரணை தொடங்கினால், மேகாலயா காவல் நிலையத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் சிறையில் அடைக்கப்படுவார்கள்’ என்று கூறினார்.