Why is it not valid to welcome the Prime Minister? - Punjab Chief Minister's explanation!

பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05/01/2022) பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூரில் 42 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, அங்கு நடைபெறும் பேரணியில் உரையாற்றுவதாக இருந்தது. இந்த நிலையில் பஞ்சாப் வந்த பிரதமர் நரேந்திர மோடி, மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார்.

Advertisment

இந்தநிலையில் பிரதமர் சென்ற வழியில், போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்தனர். இதன் காரணமாக மேம்பாலம் ஒன்றில் 15 முதல் 20 நிமிடம் வரை பிரதமர் நரேந்திர மோடி சிக்கிக்கொண்டார். பின்னர் பிரதமர் மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பி சென்றார். இந்த பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், சண்டிகரில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, "தான் பிரதமரைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் தன்னுடன் இருந்த சிலருக்கு கரோனா உறுதியானதால் பிரதமரை வரவேற்க செல்ல முடியவில்லை. தானும் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தேன். பிரதமர் வருகையையொட்டி, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. நமது பிரதமருக்கு நாங்கள் மதிப்பு அளிக்கிறோம். பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் ரத்தாகி கடைசி நேரத்தில் சாலை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் ஏற்கனவே திட்டமிட்டிருந்த பாதையை மாற்றி, வேறு பாதையில் பயணித்தது எங்களுக்கு தெரியாது. எனினும், பிரதமரின் பாதுகாப்புக்கு பஞ்சாப்பில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. ஃபெரோஸ்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் பிரதமர் சென்றது வருத்தம் அளிக்கிறது. பா.ஜ.க. இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறது" என்று குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையே, பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டில் ஃபெரோஸ்பூர் மூத்த காவல் அதிகாரி ஹர்மன் ஹன்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.