மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி (20.11.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் 20ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று (23.11.2024) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. மதியத்திற்குள் முன்னிலை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு உத்தரப்பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடைபெற்ற48 சட்டப்பேரவை தொகுதிக்காக நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.
மேலும் கேரளாவின் வயநாடு, மகாராஷ்டிராவின் நாந்தேட் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன. இதனையொட்டி வாக்கு எண்ணும் மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர் வாக்கு எண்ணும் மையங்களில் குவிந்து வருகின்றனர். அதே சமயம் கட்சி அலுவலகங்களிலும் கொண்டாட்டங்களுக்குத் தொண்டர்கள் தயாராக உள்ளனர். இதன் மூலம் இரு மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.