Skip to main content

1947-ல் எந்த போர் நடந்தது? கவனத்திற்கு வந்தால் மன்னிப்பு கேட்கிறேன் - கங்கனா ரணாவத்!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

kangana ranaut

 

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் கங்கனா ரணாவத். தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வரும் இவர், சில நாட்களுக்கு முன் ஆங்கில ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 1947-ல் பெற்றது பிச்சை. உண்மையான சுதந்திரம் 2014ஆம் ஆண்டு கிடைத்தது" எனத் தெரிவித்தார்.

 

இதற்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளது. கங்கனா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதையும், தேசிய விருதுகளையும் திரும்பப் பெறவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

இந்த நிலையில் கங்கனா ரணாவத் ஒரு புத்தகத்தின் பகுதியைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு 1947-ல் என்ன போர் நடந்தது எனக் கேள்வியெழுப்பியுள்ளதோடு, இதற்கு பதிலளித்தால் பத்மஸ்ரீ விருதைத் திரும்ப அளித்துவிட்டு, மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக கங்கனா பதிவிட்டுள்ளதாவது; எல்லா விஷயங்களும் அந்த நேர்காணலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. 1857-ல் சுதந்திரத்திற்கான முதல் கூட்டு போராட்டம் நடைபெற்றது. அதோடு சுபாஷ் சந்திரபோஸ், ராணி லக்ஷ்மிபாய் மற்றும் வீர சாவர்க்கர் போன்ற உயர்ந்தவர்கள் தியாகம் செய்தனர். 1857-ல் போர் நடந்தது எனக்கு தெரியும். ஆனால் 1947-ல் எந்த போர் நடைபெற்றது என்பது எனக்கு தெரியவில்லை. யாராவது அதை எனது கவனத்திற்கு கொண்டுவந்தால் நான் எனது பத்மஸ்ரீ விருதை திருப்பித் தருகிறேன், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இதில் எனக்கு உதவுங்கள்.

 

நான் தியாகி ராணி லக்ஷ்மி பாயின் திரைப்படத்தில் பணிபுரிந்தேன். அதற்காக 1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்தேன். தேசியவாதம் வளர்ந்தது அதோடு வலதுசாரியமும் வளர்ந்தது.  ... ஆனால் அது ஏன் திடீரென இறந்தது?. ஏன் காந்தி பகத்சிங்கை இறக்கவிட்டார். ஏன் நேதாஜி சுபாசந்திரபோஸ் கொல்லப்பட்டார். அவருக்கு ஏன் காந்திஜியின் ஆதரவு கிடைக்கவில்லை? பிரிவினைக்கோடு ஒரு வெள்ளைக்காரனால் ஏன் வரையப்பட்டது. இந்தியர்கள் ஏன் சுதந்திரத்தைக் கொண்டாடாமல், ஏன் ஒருவரை ஒருவர் கொன்றனர்?. சில விடைகளைப் பெற விரும்புகிறேன். விடைகளைப் பெற தயவு செய்து எனக்கு உதவுங்கள்.

 

2014 ஆம் ஆண்டு சுதந்திரத்தை பொறுத்தவரையில், இந்தியாவின் உணர்வும் மனசாட்சியும் விடுவிக்கப்பட்டது. இறந்த நாகரீகம் உயிரோடு சிறகடித்து வந்து, இப்போது கர்ஜனை செய்து உயர்ந்து நிற்கிறது. முதல் முறையாக ஆங்கிலம் பேசாததற்காகவோ அல்லது சிறிய நகரங்களில் இருந்து வருவதற்காகவோ அல்லது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதற்காகவோ நம்மை அவமானப்படுத்த முடியாது.  எல்லாமே ஒரே நேர்காணலில் கூறப்பட்டுள்ளன. குற்ற உணர்ச்சி உள்ளவர்கள் எரிச்சலை உணர்வார்கள், அதற்கு எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு கங்கனா பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த கருத்தும் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கங்கனா புகைப்பட சர்ச்சை - காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராகத் தேசிய மகளிர் ஆணையம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
NCW demands action from Election Commission against Congress regards kangana photo issue

நடிகை கங்கனா ரணாவத் வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கங்கனா ரணாவத்தின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென பகிரப்பட்டது.

இது சர்ச்சையான நிலையில் பதிவு குறித்து பேசிய கங்கனா, “கடந்த 20 வருடங்களில் ஒரு நடிகையாக நான் அனைத்து விதமான பெண்களின் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளேன். பாலியல் தொழிலாளிகள் வாழ்க்கையை மோசமான விமர்சனத்திற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இந்த சர்ச்சை குறித்து வீடியோ வெளியிட்ட சுப்ரியா ஸ்ரீனேட், அவரது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பலர் பயன்படுத்துவதாகவும், அதில் யாரோ ஒருவர் இந்த பதிவை வெளியிட்டுவிட்டதாகவும், தற்போது அது நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதேபோல் கிசான் காங்கிரஸின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எச்.எஸ். ஆஹிர், கங்கனாவிற்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்தார்.

இந்த நிலையில், சுப்ரியா ஸ்ரீனேட் மற்றும் எச்.எஸ். ஆஹிர் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் அவர்களின் செயலைக் கண்டித்துள்ளது.

Next Story

“நடிகை என்பதில் நம்பிக்கை இல்லை” - கங்கனா ரணாவத்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
kangana ranaut speech about election

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. பிரச்சாரத்தையும் தீவிரப் படுத்தியுள்ளன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் இன்று பா.ஜ.க கட்சி நிர்வாகிகளுடன் ஹோலி பண்டிகை கொண்டாடினார். பின்பு பேட்டியளித்த அவர், “இமாச்சலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனுராக் தாக்கூர் மற்றும் இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் ஆகியோரும் எனக்கு நிறைய ஆதரவளித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடியால் தான் இன்று நமக்கு இந்த பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. 

நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் இமாச்சல் மற்றும் மண்டி மக்களுக்கு எப்போதும் துணையாக இருப்பேன். நான் அவர்களுக்கு சேவை செய்வேன். அவர்களுடன் சேர்ந்து நடப்பேன், வெற்றி பெறுவேன். அதற்கு நாங்கள் பெரிய அளவில் பிரச்சாரம் செய்வோம். உலகில் அதிகம் விரும்பப்படும் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம். பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல்தான் எங்களின் நிகழ்ச்சி நிரல். எங்களது பெயராலும், உழைப்பாலும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நான் நம்பவில்லை, ஆனால் பிரதமர் மோடி செய்த பணியால் தேர்தலில் வெற்றி பெறுவோம். 

கட்சி வெற்றிபெற்றால், நானும் வெற்றிபெறுவேன். பிரதமர் மோடி இந்த தேர்தலில் வெற்றிபெற்றால், நாங்களும்  வெற்றிபெறுவோம். நான் ஒரு சூப்பர் ஸ்டார் அல்லது நடிகை என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் அவற்றையெல்லாம் விட்டுவிட்டேன். நான் கட்சியின் உத்தரவை பின்பற்றக்கூடிய ஒரு சாதாரண தொண்டர்” என்றார்.