சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது. சில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பெரிய அளவில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சீனாவுக்கு சிறிதும் தொடர்பில்லாத நாடுகளில் கூட கொரோனா வைரஸ் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை சீனாவில் மட்டும் 3042 பேர் பலியாகியுள்ளார்கள். உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், எந்தவயதில் இருப்பவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்குகிறது என்ற விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 80 வயதிற்கும் மேற்பட்டவர்களை அதிகபட்சமாக கொரோனா வைரஸ் 14.8 சதவீதம் தாக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற வயதுடையவர்களை வைரஸ் தாக்க வாய்ப்பு மிக குறைவாக உள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. குழந்தைகளை கொரோனா வைரஸ் தாக்கும் சதவீதம் மிக குறைவாக இருக்கின்றது.
Published on 06/03/2020 | Edited on 06/03/2020