Skip to main content

கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் எப்போது? - மத்திய அரசு தகவல்!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

covaxin

 

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழுமையான பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரக் கால அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்கள்  வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக் கால அங்கீகாரம் கேட்டு, பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது. இதன்பிறகு, கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக் கால அங்கீகாரம் வழங்குவது குறித்து நான்கு முதல் ஆறு வாரங்களில் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் சௌமியா ஸ்வாமிநாதன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆகஸ்ட் மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு, மாநிலங்களவையில் தெரிவித்துள்ள பதிலால், கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கத் தாமதமாகலாம் எனத் தெரிகிறது.

 

கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரக் கால அங்கீகாரம் பெறுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், "தடுப்பூசி ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம், ஜூலை 9 ஆம் தேதி சமர்பித்துவிட்டது. மற்ற கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க உலக சுகாதார நிறுவனம் எடுத்துக்கொண்ட நேரத்தின் அடிப்படையில் பார்த்தால், அவசரக் கால அனுமதிக்கான நடைமுறை முடிவடைய, தரவுகள் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது" எனக் கூறியுள்ளார்.

 

இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரக் கால அங்கீகாரம் கிடைக்க செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வரை ஆகலாம் எனத் தெரிகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்