Skip to main content

‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி எப்போது? - ஐசிஎம்ஆர் தகவல்!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

fg

 

இந்தியாவில் தற்போது அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதால், பூஸ்டர் டோஸ் தற்போதைய நிலையில் பொருத்தமாக இருக்காது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தாக்குதல் தற்போது சீராக குறைந்துவரும் நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவருகிறது. இதுவரை 85 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் நாடு முழுவதும் பொதுமக்களுக்குப் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே, உலக நாடுகள் சிலவற்றில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு மீண்டும் பூஸ்டர் டோஸ் (மேலும் ஒரு தவணை) தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு அந்நாட்டு அதிபர் உள்ளிட்டோருக்குப் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 

இந்நிலையில், இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள ஐசிஎம்ஆர் மருத்துவர் பல்ராம் பார்கவா, "இந்தியாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்துவதே தற்போதைக்கு எங்களின் இலக்காக உள்ளது. எனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என்பது தற்போதைய நிலையில் பொருத்தமானது அல்ல" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக தரக்கூடாது; ஐ.சி.எம்.ஆர். எச்சரிக்கை

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

Do not over-prescribe antibiotics; ICMR alert

 

மக்களுக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றுக்கே ஆன்டிபயாடிக் மருந்தினை மருத்துவர்கள் தரக்கூடாது என்று மருத்துவர்களுக்கு ஐ.சி.எம்.ஆர். எனப்படும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

 

ஆன்டிபயாடிக் மருந்துகள் உலகம் முழுவதும் மருத்துவர்களால் அதிகளவில் பரிந்துரை செய்யப்படுகிறது. உலகளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளும் மக்கள் இந்தியாவில் அதிகளவில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு முழுவதும் ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில் கார்பெனம் எனப்படும் ஆன்டிபயாடிக் மருந்து அதிகமான மக்களுக்கு பலனளிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

 

இந்நிலையில், ஆன்டிபயாடிக் என்று அழைக்கப்படுகின்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தோல் மற்றும் மெல்லிய திசு நோய்த்தொற்றுகளுக்கு 5 நாட்களுக்கும், சமூக அளவில் பரவியுள்ள நிமோனியாவுக்கு 5 நாட்களுக்கும், நிமோனியா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு 8 நாட்களுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தரலாம்.

 

லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்து தருவதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும். பொதுவாக, ரத்தம் அல்லது பிற திசுக்களில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் இருப்பு மற்றும் அவற்றின் இருப்புக்கு உடலின் எதிர்வினை ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் ஒரு தீவிர நிலை கொண்ட நோயாளிகளுக்கும் வழங்கலாம்.

 

பல்வேறு உறுப்புகளின் செயலிழப்பு, மரணத்திற்கு வழிவகுக்கும் செப்சிஸ் மற்றும் அதன் தீவிரநிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், சமூக அளவிலான நிமோனியா பாதித்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தரப் பரிந்துரைக்கப்படுகிறது.

 


 

Next Story

ரூ.200ல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி; மத்திய உயிரிதொழில் நுட்பத்துறை அறிமுகம்

Published on 02/09/2022 | Edited on 02/09/2022

 

Cervical cancer vaccine at Rs.200; Introduced by Central Department of Biotechnology

 

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

 

பெண்களைப் பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கான தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்திற்குக் கடந்த ஜூன் 8ல்  மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பலகட்டங்களாகச் சோதனைகள் நடத்தப்பட்டு தற்போது தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. 

 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார். மத்திய உயிரியல் தொழில் நுட்பத்துறையும் சீரம் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்தது. தடுப்பூசியின் ஆரம்ப விலை  200 ரூபாய் முதல் அதிகபட்சமாக 400 ரூபாய் வரை மட்டுமே இருக்கும் என சீரம் நிறுவன தலைமைச்செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகளில் 200 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்கத் திட்டம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.