
மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். கமலின் ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய கமலின் கருத்துக்கு கர்நாடகாவில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அம்மாநில முதலமைச்சர் முதல் எதிர் கட்சி தொடங்கி பல்வேறு கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.
மேலும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றும் எச்சரிக்கைகள் விடுத்தன. ஆனால் கமல் 'அன்பும் மன்னிப்பு கேட்காது' என அவரது பாணியில் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லிவிட்டார். இருந்தாலும் அங்கு எதிர்ப்புக் குரல்கள் ஓய்ந்தபாடில்லை. கமலுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்புகள் கூறிய எச்சரிக்கையை வலியுறுத்தியது. இதனால் தக் லைஃப் படம் கர்நாடாகவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே படத்தை எந்த தடையும் இல்லாமல் திரையிடவும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கமல் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா கமல் தரப்பிற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், 'கன்னட மொழி தமிழ் மொழியில் இருந்து பிறந்தது என்று கூற நீங்கள் என்ன மொழியில் ஆய்வாளரா? கன்னட மொழி குறித்துப் பேசி கமல்ஹாசன் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளார். கமல்ஹாசனின் மொழி குறித்து இந்த பேச்சு கன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியுள்ளது.
எந்த ஒரு மொழியும் மற்றொரு மொழியில் இருந்து பிறந்தது இல்லை. ஒரு மன்னிப்பு கேட்டால் என்ன? கமல்ஹாசன் தன்னுடைய பேச்சால் கன்னடம் பேசும் மக்களின் மொழி உணர்வை சிறுமைப்படுத்திவிட்டு தற்பொழுது வணிக நோக்கத்திற்காக நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். மன்னிப்பு கேட்பதே இந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும். கன்னடம் தமிழில் இருந்து பிறந்ததற்கு என்ன ஆதாரம்?' என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதேபோல் கமல் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில் 'சூழலை சுமூகமாக்கவே விரும்புகிறோம். நிலைமை கைமீறி விட்டது. தக் லைஃப் படத்திற்கு தடை விதிப்பது என்பது மக்களின் சினிமா பார்க்கும் உரிமையை மீறும் செயல்' என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கானது பிற்பகல் 2:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ''தமிழுடன் சம்ஸ்கிருதம் கலந்து பிறந்ததுதான் கன்னடம் என்பது எல்லோருக்கும் தெரியும். நாங்கள் நிரூபிக்க சான்றுகள் இருக்கிறது. அதேபோல் கன்னட மொழி எப்படித் தோன்றியது; அதன் தொடக்கம் என்ன என சான்றுடன் நிரூபித்தால் இதில் ஒரு பேச்சும் இல்லை. அதைவிட்டுட்டு நீங்கள் என்ன மொழியில் வல்லுநரா என்று கேட்டால் கேள்வி எழுப்பிய நீதிபதி என்ன மொழியியல் வல்லுநரா?
கமல்ஹாசன் சொன்ன கருத்தை ஏற்க மனமில்லையா உங்களுக்கு? கர்நாடக மொழியியல் அறிஞர்கள் வாதப்பூர்வமாக, சான்றுபூர்வமாக நிரூபித்தால் இப்படி பேசுவதை விட்டுவிடுகிறோம். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக் கூடாது. கேட்டால் அது தனிப்பட்ட நபரின் மன்னிப்பாக இருக்காது. தமிழினம் அவமானப்படுவதாக ஆகிவிடும். நாங்கள் எல்லோரும் கமல்ஹாசனுக்கு துணை நிற்போம்' என்றார்.