இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தோற்றம் குறித்து மேற்கு வங்க மாநில அமைச்சர் அகில் கிரி விமர்சித்துள்ளது, தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவின் சட்டப்பேரவையில் அமைச்சராக இருக்கும் அகில் கிரி நேற்று நந்திகிராம் தொகுதி மக்களிடையே பேசும் போது, பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரி என் தோற்றம் நன்றாக இல்லை என்கிறார். அவர் அழகாக இருக்கிறார். நாங்கள் யாரையும் அவர்கள் தோற்றத்தை வைத்து மதிப்பிடுவதில்லை. குடியரசுத் தலைவர் பதவியை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் குடியரசுத் தலைவர் மாளிகை எப்படி இருக்கு என விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அகில் கிரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைதான் குறிப்பிட்டு விமர்சித்திருக்கிறார் என்று கூறி பலரும் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவை சேந்த அமித் மாள்வியா, ‘அமைச்சர் அகில் கிரி பேசியதைக் குறிப்பிட்டு "மம்தா எப்போதும் பழங்குடியினருக்கு எதிரானவர். அதனால் தான் அவர் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக வர ஆதரவு அளிக்கவில்லை. இப்போது அவரது அரசின் அமைச்சர் இப்படிப் பேசுவது வெட்கக்கேடானது’ எனக் காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதேபோல் மேற்கு வங்க பாஜகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.