Wellington Square under control ... Military honor begins!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது. நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு.

Advertisment

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடலுக்கு இன்று ராணுவ மரியாதை செலுத்தப்பட இருக்கிறது. குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்திற்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ராணுவ மரியாதையுடன் கொண்டுவரப்பட்டது. முப்படைகளின் தளபதி ஹரிகுமார் (கடற்படை), வி.சவுத்ரி (விமானப்படை), நரவானே (ராணுவம்) மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இந்த அஞ்சலி நிகழ்வுக்காக13 பேரின் உடலும் ராணுவ வாகனத்தில் கொண்டுசெல்லப்படுகிறது. பின்னர் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து உடல்கள் ராணுவ விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட இருக்கிறது. தற்பொழுது விபத்து நிகழ்ந்த காட்டேரி பகுதி, குன்னூர் வெலிங்டன் சதுக்கம்பகுதி ஆகியவை ராணுவ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 80 சதவிகிதம் தீக்காயத்துடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், 4 பேரின் உடல் அடையாளம் காணமுடியாத அளவிற்கு உடல் தீயில் எரிந்ததால் அடையாளம் காண முடியாத நிலை இருந்தது. தொடர்ந்து முடி, எலும்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தபிறகு இன்னார் என்று அடையாளம் காணப்பட்டதாக புதிய தகவலும் வெளியாகியுள்ளது.

Advertisment