Skip to main content

"ஆரம்பக்கால நற்பெயரை மீண்டும் பெற்றுத்தர வாய்ப்பு" - ஏர் இந்தியாவை வாங்கியது குறித்து ரத்தன் டாடா!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

ratan tata

 

1932 ஆம் ஆண்டு டாடா குழுமம் ஆரம்பித்த டாடா ஏர்லைன்ஸ் 1946ஆம் ஆண்டு ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றப்பட்டது. இதன்பின்னர் 1953ஆம் ஆண்டு ஏர் இந்தியா அரசுடைமையாக்கப்பட்டது. இதன்பின்னர் கடந்த சில வருடங்களாக ஏர் இந்தியாவைத் தனியாருக்கு விற்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் டாடா நிறுவனம் 18,000 கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை ஏலம் எடுத்துள்ளது.

 

இதன்மூலம் 68 ஆண்டுகளுக்குப் பின்னர் டாடா நிறுவனம் மீண்டும் ஏர் இந்தியாவின் உரிமையாளராகியுள்ளது. இதனையடுத்து ரத்தன் டாடா, ஏர் இந்தியாவை வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது; ஏர் இந்தியா நிறுவனத்திற்கான ஏலத்தில் டாடா குழுமம் வெற்றி பெற்றது சிறப்பான செய்தி! ஏர் இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்ப பெரிய அளவிலான முயற்சிகள் தேவைப்படும் என்றாலும், விமான துறையில் டாடா குழுமம் இருப்பதற்கு வலுவான சந்தை வாய்ப்பை வழங்கும் என நம்புகிறேன்.

 

திரு ஜெஆர்டி டாடாவின் தலைமையில் ஏர் இந்தியா, ஒரு காலத்தில், உலகின் மிகவும் மதிப்புமிக்க விமான நிறுவனங்களில் ஒன்றாகப் புகழ் பெற்றிருந்தது. ஆரம்ப காலத்தில் அது அனுபவித்த கவுரவத்தையும்,  நற்பெயரையும் மீண்டும் அதற்குப் பெற்றுத்தரும் வாய்ப்பை டாடாக்கள் பெறுவார்.  திரு ஜேஆர்டி டாடா இன்று நம்மிடையே இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்களைத் தனியார் துறைக்கு விற்கும் அரசாங்கத்தின் அண்மைக்கால கொள்கையை நாம் அங்கீகரித்து நன்றி தெரிவிக்க வேண்டும்.  மீண்டும் வருக, ஏர் இந்தியா!


இவ்வாறு ரத்தன் டாடா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்தன் டாடாவையும் விட்டுவைக்காத டீப் ஃபேக்  

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

nn

 

அண்மையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா போல சித்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையங்களில் வைரல் ஆகியது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோ என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு இதுபோன்ற டீப் ஃபேக் வீடியோக்களை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி இருந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்தும் பல்வேறு பிரபலங்களைப் போல டீப் ஃபேக் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இந்நிலையில் சமீபத்தில் தொழிலதிபர் ரத்தன் டாடா முதலீடு செய்ய அழைப்பு விடுக்குமாறு பேசி உரையாற்றிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அது டீப் ஃபேக் வீடியோ என தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவை யாரும் நம்ப வேண்டாம் தொழிலதிபர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

போர் பதற்றம்; விமான சேவை ரத்து!

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

air india Flight to Tel Aviv canceled

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் காசா பகுதி தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்து வருகிறது. இந்த காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பை, இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இன்று காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்குப் பதிலடி தரும் வகையில், ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்ததாகவும், 908 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் போர் பதற்றம் காரணமாகப் பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்லியிலிருந்து டெல் அவிவ் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.