Skip to main content

கேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்!!!

Published on 09/08/2020 | Edited on 09/08/2020


அடை மழைச் சரித்திரத்தில் இது போன்ற பேரிடர் கொத்துக் கொத்தாக நடந்ததில்லை என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள். அத்தனை பயங்கரம் கொண்டது மூணாறு நிலச்சரிவு. புதையுண்டவர்களின் எண்ணிக்கை தோராயமாகத் தெரிகிறதேயொழிய உறுதியிட்டுச் சொல்ல முடியாமல் தவிக்கிறது கேரளா.

கேரளாவின் மூணாறு மலைமேலுள்ள ராஜமலை, பெட்டிமுடி எஸ்டேட்டிலிருக்கும் டாட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தேயிலை வளர்ப்பு மற்றும் தேயிலை பறித்தல் போன்ற கூலி வேலைகளுக்காக அங்கே சென்று குடியமர்ந்தவர்களில் 90 சதம் தமிழர்கள். குறிப்பாக இந்த வம்சாவழியினர் சுமார் 80 வருடங்களுக்கு முன்பே அங்கு சென்றவர்கள். அவர்களில் கணிசமானவர்கள் தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அடித்தட்டு மக்களே. ஆண்டுக்கு எப்போதாவது தங்களின் பூர்வீகக் கிராமம் செல்பவர்களாம்.
 

சரிவைக் கொண்ட தேயிலை எஸ்டேட் பக்கமிருக்கும் பகுதியிலுள்ள பகுதிகளில் குடும்பம் குடும்பமாகக் குடியிருந்துள்ளனர். தோராயமாகப் பார்த்தால் தென்மாவட்டங்களிலிருந்து சுமார் 130 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெண்டு பிள்ளைகளோடு அங்கு செட்டிலாகியுள்ளதாகத் தகவல்.

மலைப்பாங்கான பகுதியில் வருடம் தோறும் மழை கொட்டுவது சகஜம் தான். அப்படிப் பெய்கிற மழைகாரணமாக அந்த தேயிலை விவசாய பூமியானது சிறுகச்சிறுக தனது பிடிமானத்தை இழந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர் மூணாறுப் பகுதியினர். இந்த நிலையில் தான் கடந்த 6ம் தேதியன்று இரவு அடைமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. அது சமயம் மக்கள் குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதியின் பள்ளத்தாக்கில் ஓடுகிற ஆறு வெள்ளப் பெருக்கெடுத்திருக்கிறது. அடுத்த நொடித் தேயிலைத் தோட்டச் சரிவு பகுதிகள் வெள்ளத்தால் சரிந்து, விதி, குடியிருப்புப் பகுதிகளின் மீது விழ, அங்குள்ள மொத்த வீடுகளும் இதில் புதைந்தும், தூக்கியும் வீசப்பட்டுள்ளன. பலவீடுகள் நொறுக்கப்பட்டு ஆற்றோடு போயுள்ளனவாம்.

நடு இரவு பெய்த மழையால் இந்தச் சரிவு விபரம் மூணாறு மாவட்டத்தின் நிர்வாகம் வரை எட்டவில்லையாம். விடிந்த பிறகு அரிதிலும் அரிதாகத் தப்பிப் பிழைத்து ஒரு சிலர் 15 கி.மீ. தொலைவு சென்று தகவல் கொடுத்த பிறகே நிலச்சரிவு பயங்கரம் வெளிப்பட்டு அரசு நிர்வாகம் அலர்ட் ஆகியிருக்கிறது. அதன் பிறகே மீட்புப் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன. உலகத்திலேயே கதற வாய்ப்பில்லாமல், குழந்தை குட்டிகளோடு புதையுண்டிருக்கின்றன அந்தக் குடும்பங்கள்.

பலர் சரிவின் போது தூக்கி வீசப்பட்டதில் பள்ளத்தாக்கில் ஓடுகிற ஆற்றோடு போனதாகவும் அஞ்சப்படுகிறது. அப்படி வீசப்பட்ட உடல்களும், அவர்களின் டி.வி. பெட்டிகள் போன்ற உடமைகள் 5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்டள்ளதாம். அரசு இதுவரையிலும் மாண்டவர்களின் எண்ணிக்கை 43 என்று தெரிவித்தாலும், எண்ணிக்கை நூறையும் தாண்டும் என்கிறார்கள். பலியான இவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியிலுள்ள தலையால் நடந்தான்குளம், பாரதி நகரின் 100க்கும் மேற்பட்டோர். அவர்களில் பன்னீர் செல்வம், தவசியம்மாள், மவுனிகா, முருகன், ராஜலட்சுமி, விஜிலா, மணிகண்டன் உள்ளிட்ட சிறியவர் முதல் பெரியவர்கள் வரை என்று 18 பேர்கள் தெரியவருகிறது. மீத முள்ளவர்கள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை எனக் கதறுகிறார்கள் இந்தக் கிராமத்தின் உறவினர்கள்.

அதே போன்று தென்காசி மாவட்டத்தின் புளியங்குடிப் பகுதியிலுள்ள காந்திராஜன் குடும்பம், வீரசிகாமணி அருகேயுள்ள புதுக்கிராமத்தின் அண்ணாத்துரை மற்றும் அங்குள்ள 12 பேர் என்று ஒட்டு மொத்தமாகப் புதைந்துள்ளனராம்.

அடுத்து நெல்லை மாவட்டத்தின் மானூர் பகுதியிலுள்ள பிள்ளையார்க்குளத்தின் 50க்கும் மேற்பட்டோர் அங்குள்ள தொகுப்பு வீடுகளில் வசித்தவர்கள். அத்தனை பேரும் புதைந்திருக்கலாம் என்று அஞ்சுகின்றனர் அங்குள்ள உறவினர்கள். இவர்கள் புதையுண்ட கயத்தாறு பகுதியினரின் சம்பந்த வழி உறவினர்கள். அதன்காரணமாக வேலைக்காக எஸ்டேட் சென்றவர்கள் என வேதனையைக் கொட்டுகின்றனர் உறவினர்கள.

நிலச்சரிவில் மாண்டவர்கள் பற்றி முழுவிபரம் தெரியாவிட்டாலும், குடும்ப எண்ணிக்கையின்படி நூறுகளை தாண்டலாம் என்ற பீதியும் கிராமங்களில் பரவியுள்ளது. பேரிடர் வரலாற்றில் ஜீரணிக்க முடியாத துயரத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது மூணாறு நிலச்சரிவு அழிவு பயங்கரம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகன் தோற்க வேண்டும் தந்தை பேச்சு; நாய்கள் போன்றவர்கள் மகன் பதிலடி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
competition retaliated Father Congress, son BJP in kerala

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு உட்பட 22 மாநிலங்களுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. அதன்படி, மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளாவில்,  கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கி கடந்த 4ஆம் தேதி வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே.ஆண்டனியின் மகனான அனில் ஆண்டனி, பத்தனம்திட்டா மக்களவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். கடந்த ஆண்டு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அனில் ஆண்டனி, பா.ஜ.கவில் சேர்ந்து கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.ஆண்டனி, பா.ஜ.க வேட்பாளரான தனது மகன் இந்த தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் ஏ.கே.ஆண்டனி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மோடி, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தொடர்ந்து போராடி வருகின்றனர். முதல்வர் பினராயி விஜயனின் குற்றச்சாட்டுகளை கேரள மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். முதல்வர் பினராயி விஜயனை கேரள மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் முன்னேறி வருகிறது. பா.ஜ.க கீழே செல்கிறது. நாங்கள் ஆட்சி அமைக்க இது ஒரு வாய்ப்பு என்று நினைக்கிறேன். பா.ஜ.க சார்பில் பத்தனம்திட்டா மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரான எனது மகன் அனில் ஆண்டனி தோற்க வேண்டும். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ ஆண்டனி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும். முக்கிய காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள் பா.ஜ.கவில் இணைந்தது தவறு. அவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை குடும்பமும், அரசியலும் வேறு வேறு தான்.

காங்கிரஸ் எனது மதம். மத்தியில் ஆளும் கட்சி இந்தியா என்ற கருத்தையே அழிக்க முயல்கிறது. தயவு செய்து இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 3வது இடத்திலேயே பா.ஜ.க வேட்பாளர்கள் இருப்பார்கள். சபரிமலை பெண்கள் நுழைவு சர்ச்சையால் 2019 பொதுத் தேர்தலின் போது பா.ஜ.கவின் பொற்காலம் இருந்தது. மேலும் அவர்கள் சில கூடுதல் வாக்குகளைப் பெற்றார்கள். ஆனால், இந்த ஆண்டு, பாஜகவுக்கு சாதகமாக எந்த காரணியும் இல்லை. மேலும் அவர்கள் குறைந்த வாக்குகளைப் பெறப் போகிறார்கள். நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆட்சிக்கு முடிவு கட்ட காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியல் சாசனம் நாசமாகி, ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும். அந்த ஆபத்தை நாம் போக்க வேண்டும்” என்று கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.ஆண்டனியின் இந்த கருத்துக்கு அவரது மகனும், பா.ஜ.க வேட்பாளருமான அனில் ஆண்டனி பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஏ.கே.ஆண்டனி மீது பரிதாபப்படுகிறேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவருக்கு வயது 84. அவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோதும், தேச விரோத காந்தி குடும்பத்துக்காக பணியாற்றி, ஆயுதப்படைகளை அவதூறு செய்த எம்.பி.க்காக பேசி வருகிறார். காலாவதியான எண்ணங்களைக் கொண்ட சில காலாவதியான தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்காக உழைக்கின்றனர். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்காக வேலை செய்பவர்கள் நிலவை பார்த்து குரைக்கும் நாய்கள் போன்றவர்கள்” என்று பேசினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் கருத்துக்கு அவரது மகனான பா.ஜ.க வேட்பாளர் பதிலடி கொடுத்தது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனேஜர் என்றே தெரியாது'-மழுப்பிய நயினார் நாகேந்திரன்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டி ஏ-1 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் நயினார் நாகேந்திரன் கோட்டாவில் அவர்கள் பயணித்தது தெரியவந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

nn

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி என்பவர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மது பாட்டில்களும் சிக்கியதாக பறக்கும் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நயினார் நாகேந்திரன் தங்கும் ஹோட்டல் அறையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அவர் தங்கும் அறையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. நாகேந்திரனுக்கு தொடர்புடைய வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டிலும் 3.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திமுகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், 'எனக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவரவர்கள் தொழிலுக்காக பணத்தை வைத்திருப்பார்கள். எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனஜர் என்றே தெரியாது' என பதிலளித்துள்ளார்.