Skip to main content

கேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்!!!

Published on 09/08/2020 | Edited on 09/08/2020


அடை மழைச் சரித்திரத்தில் இது போன்ற பேரிடர் கொத்துக் கொத்தாக நடந்ததில்லை என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள். அத்தனை பயங்கரம் கொண்டது மூணாறு நிலச்சரிவு. புதையுண்டவர்களின் எண்ணிக்கை தோராயமாகத் தெரிகிறதேயொழிய உறுதியிட்டுச் சொல்ல முடியாமல் தவிக்கிறது கேரளா.

கேரளாவின் மூணாறு மலைமேலுள்ள ராஜமலை, பெட்டிமுடி எஸ்டேட்டிலிருக்கும் டாட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தேயிலை வளர்ப்பு மற்றும் தேயிலை பறித்தல் போன்ற கூலி வேலைகளுக்காக அங்கே சென்று குடியமர்ந்தவர்களில் 90 சதம் தமிழர்கள். குறிப்பாக இந்த வம்சாவழியினர் சுமார் 80 வருடங்களுக்கு முன்பே அங்கு சென்றவர்கள். அவர்களில் கணிசமானவர்கள் தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அடித்தட்டு மக்களே. ஆண்டுக்கு எப்போதாவது தங்களின் பூர்வீகக் கிராமம் செல்பவர்களாம்.
 

சரிவைக் கொண்ட தேயிலை எஸ்டேட் பக்கமிருக்கும் பகுதியிலுள்ள பகுதிகளில் குடும்பம் குடும்பமாகக் குடியிருந்துள்ளனர். தோராயமாகப் பார்த்தால் தென்மாவட்டங்களிலிருந்து சுமார் 130 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெண்டு பிள்ளைகளோடு அங்கு செட்டிலாகியுள்ளதாகத் தகவல்.

மலைப்பாங்கான பகுதியில் வருடம் தோறும் மழை கொட்டுவது சகஜம் தான். அப்படிப் பெய்கிற மழைகாரணமாக அந்த தேயிலை விவசாய பூமியானது சிறுகச்சிறுக தனது பிடிமானத்தை இழந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர் மூணாறுப் பகுதியினர். இந்த நிலையில் தான் கடந்த 6ம் தேதியன்று இரவு அடைமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. அது சமயம் மக்கள் குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதியின் பள்ளத்தாக்கில் ஓடுகிற ஆறு வெள்ளப் பெருக்கெடுத்திருக்கிறது. அடுத்த நொடித் தேயிலைத் தோட்டச் சரிவு பகுதிகள் வெள்ளத்தால் சரிந்து, விதி, குடியிருப்புப் பகுதிகளின் மீது விழ, அங்குள்ள மொத்த வீடுகளும் இதில் புதைந்தும், தூக்கியும் வீசப்பட்டுள்ளன. பலவீடுகள் நொறுக்கப்பட்டு ஆற்றோடு போயுள்ளனவாம்.

நடு இரவு பெய்த மழையால் இந்தச் சரிவு விபரம் மூணாறு மாவட்டத்தின் நிர்வாகம் வரை எட்டவில்லையாம். விடிந்த பிறகு அரிதிலும் அரிதாகத் தப்பிப் பிழைத்து ஒரு சிலர் 15 கி.மீ. தொலைவு சென்று தகவல் கொடுத்த பிறகே நிலச்சரிவு பயங்கரம் வெளிப்பட்டு அரசு நிர்வாகம் அலர்ட் ஆகியிருக்கிறது. அதன் பிறகே மீட்புப் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன. உலகத்திலேயே கதற வாய்ப்பில்லாமல், குழந்தை குட்டிகளோடு புதையுண்டிருக்கின்றன அந்தக் குடும்பங்கள்.

பலர் சரிவின் போது தூக்கி வீசப்பட்டதில் பள்ளத்தாக்கில் ஓடுகிற ஆற்றோடு போனதாகவும் அஞ்சப்படுகிறது. அப்படி வீசப்பட்ட உடல்களும், அவர்களின் டி.வி. பெட்டிகள் போன்ற உடமைகள் 5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்டள்ளதாம். அரசு இதுவரையிலும் மாண்டவர்களின் எண்ணிக்கை 43 என்று தெரிவித்தாலும், எண்ணிக்கை நூறையும் தாண்டும் என்கிறார்கள். பலியான இவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியிலுள்ள தலையால் நடந்தான்குளம், பாரதி நகரின் 100க்கும் மேற்பட்டோர். அவர்களில் பன்னீர் செல்வம், தவசியம்மாள், மவுனிகா, முருகன், ராஜலட்சுமி, விஜிலா, மணிகண்டன் உள்ளிட்ட சிறியவர் முதல் பெரியவர்கள் வரை என்று 18 பேர்கள் தெரியவருகிறது. மீத முள்ளவர்கள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை எனக் கதறுகிறார்கள் இந்தக் கிராமத்தின் உறவினர்கள்.

அதே போன்று தென்காசி மாவட்டத்தின் புளியங்குடிப் பகுதியிலுள்ள காந்திராஜன் குடும்பம், வீரசிகாமணி அருகேயுள்ள புதுக்கிராமத்தின் அண்ணாத்துரை மற்றும் அங்குள்ள 12 பேர் என்று ஒட்டு மொத்தமாகப் புதைந்துள்ளனராம்.

அடுத்து நெல்லை மாவட்டத்தின் மானூர் பகுதியிலுள்ள பிள்ளையார்க்குளத்தின் 50க்கும் மேற்பட்டோர் அங்குள்ள தொகுப்பு வீடுகளில் வசித்தவர்கள். அத்தனை பேரும் புதைந்திருக்கலாம் என்று அஞ்சுகின்றனர் அங்குள்ள உறவினர்கள். இவர்கள் புதையுண்ட கயத்தாறு பகுதியினரின் சம்பந்த வழி உறவினர்கள். அதன்காரணமாக வேலைக்காக எஸ்டேட் சென்றவர்கள் என வேதனையைக் கொட்டுகின்றனர் உறவினர்கள.

நிலச்சரிவில் மாண்டவர்கள் பற்றி முழுவிபரம் தெரியாவிட்டாலும், குடும்ப எண்ணிக்கையின்படி நூறுகளை தாண்டலாம் என்ற பீதியும் கிராமங்களில் பரவியுள்ளது. பேரிடர் வரலாற்றில் ஜீரணிக்க முடியாத துயரத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது மூணாறு நிலச்சரிவு அழிவு பயங்கரம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்ட நெரிசல் - சேதமடைந்த விஜய்யின் கார்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
vijay car damage in kerala the goat movie shoot

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்துவிடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” எனப் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து த்ரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறுகிறது. இதற்காக இன்று விமானம் மூலம் கேரளாவிற்குச் சென்றார் விஜய். காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரை காண கேரள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். விஜய் வந்து இறங்கியதும் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்பு ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார் விஜய். 

vijay car damage in kerala the goat movie shoot

அவர் வெளியில் செல்லும் போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்துள்ளனர். அதனால் கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. உள்ளே உட்கார்ந்திருந்த விஜய்யும் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்தார். ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

பீட்டா அமைப்புடன் கூட்டணி - கோயிலுக்கு பிரம்மாண்ட பரிசு வழங்கிய பிரியாமணி

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Priyamani donate mechanical elephant to Kerala temple with peta

இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாகவுள்ளார் பிரியாமணி. கடந்த மாதம் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 370 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது மைதான், கன்னடத்தில் கைமாரா மற்றும் தமிழில் கொட்டேஷன் கேங் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Priyamani donate mechanical elephant to Kerala temple with peta

இந்த நிலையில், பீட்டா அமைப்புடன் இணைந்து இயந்திர யானையை கோவிலுக்குப் பரிசாக வழங்கியுள்ளார் பிரியாமணி. கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக இயந்திர யானைகளை கோவில்களில் இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை பீட்டா அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இந்த முன்னெடுப்பில் அவர்களுடன் கைகோர்த்த பிரியாமணி, கேரளா கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு, இயந்திர யானையை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளார். இந்த கோயிலில் யானைகளை சொந்தமாக வைத்திருக்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ கூடாது என்ற முடிவை பின்பற்றி வருகிறார்கள். இயந்திர யானைக்கு மகாதேவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது இயந்திர யானை இதுவாகும்.

இது குறித்துப் பேசிய அவர், “தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் என்பது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் நமது வளமான கலாச்சார நடைமுறைகளையும் பாரம்பரியத்தையும் பராமரிக்க முடியும்” என்றுள்ளார்.