Skip to main content

கேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்!!!

Published on 09/08/2020 | Edited on 09/08/2020


அடை மழைச் சரித்திரத்தில் இது போன்ற பேரிடர் கொத்துக் கொத்தாக நடந்ததில்லை என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள். அத்தனை பயங்கரம் கொண்டது மூணாறு நிலச்சரிவு. புதையுண்டவர்களின் எண்ணிக்கை தோராயமாகத் தெரிகிறதேயொழிய உறுதியிட்டுச் சொல்ல முடியாமல் தவிக்கிறது கேரளா.

கேரளாவின் மூணாறு மலைமேலுள்ள ராஜமலை, பெட்டிமுடி எஸ்டேட்டிலிருக்கும் டாட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தேயிலை வளர்ப்பு மற்றும் தேயிலை பறித்தல் போன்ற கூலி வேலைகளுக்காக அங்கே சென்று குடியமர்ந்தவர்களில் 90 சதம் தமிழர்கள். குறிப்பாக இந்த வம்சாவழியினர் சுமார் 80 வருடங்களுக்கு முன்பே அங்கு சென்றவர்கள். அவர்களில் கணிசமானவர்கள் தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அடித்தட்டு மக்களே. ஆண்டுக்கு எப்போதாவது தங்களின் பூர்வீகக் கிராமம் செல்பவர்களாம்.
 

சரிவைக் கொண்ட தேயிலை எஸ்டேட் பக்கமிருக்கும் பகுதியிலுள்ள பகுதிகளில் குடும்பம் குடும்பமாகக் குடியிருந்துள்ளனர். தோராயமாகப் பார்த்தால் தென்மாவட்டங்களிலிருந்து சுமார் 130 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெண்டு பிள்ளைகளோடு அங்கு செட்டிலாகியுள்ளதாகத் தகவல்.

மலைப்பாங்கான பகுதியில் வருடம் தோறும் மழை கொட்டுவது சகஜம் தான். அப்படிப் பெய்கிற மழைகாரணமாக அந்த தேயிலை விவசாய பூமியானது சிறுகச்சிறுக தனது பிடிமானத்தை இழந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர் மூணாறுப் பகுதியினர். இந்த நிலையில் தான் கடந்த 6ம் தேதியன்று இரவு அடைமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. அது சமயம் மக்கள் குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதியின் பள்ளத்தாக்கில் ஓடுகிற ஆறு வெள்ளப் பெருக்கெடுத்திருக்கிறது. அடுத்த நொடித் தேயிலைத் தோட்டச் சரிவு பகுதிகள் வெள்ளத்தால் சரிந்து, விதி, குடியிருப்புப் பகுதிகளின் மீது விழ, அங்குள்ள மொத்த வீடுகளும் இதில் புதைந்தும், தூக்கியும் வீசப்பட்டுள்ளன. பலவீடுகள் நொறுக்கப்பட்டு ஆற்றோடு போயுள்ளனவாம்.

நடு இரவு பெய்த மழையால் இந்தச் சரிவு விபரம் மூணாறு மாவட்டத்தின் நிர்வாகம் வரை எட்டவில்லையாம். விடிந்த பிறகு அரிதிலும் அரிதாகத் தப்பிப் பிழைத்து ஒரு சிலர் 15 கி.மீ. தொலைவு சென்று தகவல் கொடுத்த பிறகே நிலச்சரிவு பயங்கரம் வெளிப்பட்டு அரசு நிர்வாகம் அலர்ட் ஆகியிருக்கிறது. அதன் பிறகே மீட்புப் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன. உலகத்திலேயே கதற வாய்ப்பில்லாமல், குழந்தை குட்டிகளோடு புதையுண்டிருக்கின்றன அந்தக் குடும்பங்கள்.

பலர் சரிவின் போது தூக்கி வீசப்பட்டதில் பள்ளத்தாக்கில் ஓடுகிற ஆற்றோடு போனதாகவும் அஞ்சப்படுகிறது. அப்படி வீசப்பட்ட உடல்களும், அவர்களின் டி.வி. பெட்டிகள் போன்ற உடமைகள் 5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்டள்ளதாம். அரசு இதுவரையிலும் மாண்டவர்களின் எண்ணிக்கை 43 என்று தெரிவித்தாலும், எண்ணிக்கை நூறையும் தாண்டும் என்கிறார்கள். பலியான இவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியிலுள்ள தலையால் நடந்தான்குளம், பாரதி நகரின் 100க்கும் மேற்பட்டோர். அவர்களில் பன்னீர் செல்வம், தவசியம்மாள், மவுனிகா, முருகன், ராஜலட்சுமி, விஜிலா, மணிகண்டன் உள்ளிட்ட சிறியவர் முதல் பெரியவர்கள் வரை என்று 18 பேர்கள் தெரியவருகிறது. மீத முள்ளவர்கள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை எனக் கதறுகிறார்கள் இந்தக் கிராமத்தின் உறவினர்கள்.

அதே போன்று தென்காசி மாவட்டத்தின் புளியங்குடிப் பகுதியிலுள்ள காந்திராஜன் குடும்பம், வீரசிகாமணி அருகேயுள்ள புதுக்கிராமத்தின் அண்ணாத்துரை மற்றும் அங்குள்ள 12 பேர் என்று ஒட்டு மொத்தமாகப் புதைந்துள்ளனராம்.

அடுத்து நெல்லை மாவட்டத்தின் மானூர் பகுதியிலுள்ள பிள்ளையார்க்குளத்தின் 50க்கும் மேற்பட்டோர் அங்குள்ள தொகுப்பு வீடுகளில் வசித்தவர்கள். அத்தனை பேரும் புதைந்திருக்கலாம் என்று அஞ்சுகின்றனர் அங்குள்ள உறவினர்கள். இவர்கள் புதையுண்ட கயத்தாறு பகுதியினரின் சம்பந்த வழி உறவினர்கள். அதன்காரணமாக வேலைக்காக எஸ்டேட் சென்றவர்கள் என வேதனையைக் கொட்டுகின்றனர் உறவினர்கள.

நிலச்சரிவில் மாண்டவர்கள் பற்றி முழுவிபரம் தெரியாவிட்டாலும், குடும்ப எண்ணிக்கையின்படி நூறுகளை தாண்டலாம் என்ற பீதியும் கிராமங்களில் பரவியுள்ளது. பேரிடர் வரலாற்றில் ஜீரணிக்க முடியாத துயரத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது மூணாறு நிலச்சரிவு அழிவு பயங்கரம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.