Skip to main content

"நமக்கு பல சவால்கள் உள்ளன" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

AMIT SHAH

 

இந்திய எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கினை ஆற்றிவரும் எல்லை பாதுகாப்புப் படையின், வருடாந்திர விருது வழங்கும் விழா இன்று (17.07.2021) நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை இணையமைச்சர்கள், உள்துறைச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு, வீர மரணமடைந்தவர்களுக்கும், பணியில் வீரதீர செயல்களைப் புரிந்தவர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

 

இதன்பிறகு நிகழ்வில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எல்லையைப் பாதுகாக்கும் படையினரால் இந்தியா பெருமையடைகிறது என தெரிவித்துள்ளார். விருது வழங்கும் விழாவில் அமித்ஷா ஆற்றிய உரை வருமாறு:

 

“உயர்ந்த தியாகத்தை செய்தவர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். உலக வரைபடத்தில் இந்தியா தனது நிலையைப் பலப்படுத்திக்கொண்டுவருகிறது. இந்தத் துணிச்சலான நெஞ்சம் கொண்டவர்களையும், போர் வீரர்களையும் நம்மால் மறந்துவிட முடியாது. எல்லை பாதுகாப்புப் படை மற்றும் எல்லைகளைப் பாதுகாக்கும் நமது துணை ராணுவப் படைகள் ஆகியவற்றால் உலக வரைபடத்தில் இந்தியாவுக்குப் பெருமை சேர்கிறது.

 

முந்தைய கிழக்கு பாகிஸ்தானில் மனித உரிமைகள் மீறப்பட்டன. பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். இப்போது வங்கதேசம் ஒரு சுதந்திர தேசமாக உள்ளது. அதில் எல்லை பாதுகாப்புப் படை முக்கியப் பங்காற்றியது. அதை ருஸ்தாம்ஜி (எல்லை பாதுகாப்பு படை நிறுவனர்) மேற்பார்வையிட்டார். 7,516 கி.மீ கரையோர எல்லையையும், 15,000 கி.மீ தரை எல்லையையும் கொண்டு நாம் முன்னேற வேண்டியிருந்தது. நீண்ட காலமாக சில முன்னுரிமைகள் காரணமாக எல்லை பாதுகாப்பு குறித்து எந்த விவாதங்களும் எழவில்லை. அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசு அமைந்தபோது எல்லை பிரச்சனை தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

எல்லை பாதுகாப்பு என்பது தேசியப் பாதுகாப்பு. நமக்குப் பல சவால்கள் உள்ளன. ஆனால், நமது துணை ராணுவப் படைகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பிரதமர் மோடியின் கீழ் நம்மிடம் சுதந்திரமான பாதுகாப்புக் கொள்கை உள்ளது. இதன்மூலம் நமது இறையாண்மைக்கு சவால் விடுத்தவர்களின் மொழியிலேயே அவர்களுக்குப் பதிலளிக்கப்பட்டது.”

இவ்வாறு அமித்ஷா உரையாற்றினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேதி கொடுத்த அமித்ஷா; தயாராகும் தமிழக எம்பிக்கள்

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Amitsha who gave the date; Preparing Tamil Nadu MPs

அண்மையில் சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் மத்தியக் குழுவும் ஆய்வு செய்த நிலையில், மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரணத் தொகையை கோரியிருந்தது.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 04/01/2024 அன்று தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தமிழக அரசு கோரியிருந்த வெள்ள நிவாரண தொகையான 37,907.19 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவரை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் ஜனவரி 13ஆம் தேதி தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என நேரில் வலியுறுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்து கட்சி எம்பிக்கள் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'இனியும் மோடி, அமித்ஷாவின் மாயாஜாலத்திற்கு இறையாக மாட்டார்கள்'-திருமாவளவன் பேச்சு

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
vck Thirumavalavan speech

ஜனவரி 26 வெல்லும் ஜனநாயகம் என்ற மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''இந்த மாநாட்டில் முதல்வர் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். தேசிய அளவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இடதுசாரிகள் கட்சித் தலைவர்கள் சீதாராம் எச்சூரி, ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்று பேருரை ஆற்ற உள்ளனர்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார முதல் புள்ளியாக இது அமையும் என நம்புகிறேன். வெல்லும் ஜனநாயகம் என்றால் வெல்லும் இந்தியா கூட்டணி என பொருள். அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அறைகூவல் விடுகிறோம்.

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் வழக்கமான நாடாளுமன்ற தேர்தல் அல்ல. இது இறுதி யுத்தம். ஜனநாயகத்தை, அரசியலமைப்பை, நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கு. இறுதி போராகவே இதனை கருதுகிறது விசிக. இந்த இறுதி போரில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். பாரதிய ஜனதாவை ஆட்சி பீடத்தில் இருந்து தூக்கி எறியும். அதற்கான ஒரு அச்சாரமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயக மாநாடு நடைபெறும்.

பில்கிஸ் பானு வழக்கில் மேல்முறையீட்டு தீர்ப்பு வெளியாகி இருப்பது மிகுந்த ஆறுதலை தருகிறது. பாதிக்கப்பட்ட அம்மையாரின் குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட்டிருக்கிறது. குஜராத் உயர் நீதிமன்றத்தால் அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்ட நிலையில் அந்த தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அரசியல் அமைப்புச் சட்டத்தை அதிகாரிகள் ஒன்று சேர்ந்து மோசடி செய்திருக்கிறார்கள் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவாரங்கள் எத்தகைய கொடூரத்தையும் செய்துவிட்டு தப்பிவிட முடியும் என பில்கிஸ் பானு தீர்ப்பின் போது கருதப்பட்டது. ஆனால் அவர்கள் தப்ப முடியாது மீண்டும் சிறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்றைக்கு அளித்துள்ள தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் நமக்கான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். பில்கிஸ் பானு குடும்பத்தினரை கொடுமையான வன்முறைக்கு உள்ளாக்கி குற்றச் செயலில் ஈடுபட்ட 11 பேரும் தண்டிக்கப்பட வேண்டும் விரைவில் சிறை படுத்தப்பட வேண்டும்.

மோடி, அமித்ஷா போன்றவர்களின் மாய மாளவித்தைகளுக்கு மக்கள் இனி மயங்க மாட்டார்கள், ஏமாற மாட்டார்கள். பத்தாண்டு காலம் நரக வேதனையை அனுபவித்திருக்கிறார்கள். பிஜேபியால் வஞ்சிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள் தான். ஆக இனியும் மோடி, அமித்ஷா போன்றவர்களின் மாயாஜால வித்தைகளுக்கு இறையாக மாட்டார்கள் என நம்புகிறோம்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் இவிஎம் முறையை பயன்படுத்த கூடாது. ஓட்டு சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். ஓட்டுச்சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் சங்பரிவார அமைப்புகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இனி எந்த காலத்திலும் அவர்கள் தேர்தல் களத்தில் அடி எடுத்து வைக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவார்கள்.

அதனால்தான் அண்மையில் விசிக சார்பில் வேண்டாம் இ.வி.எம் வேண்டாம் மீண்டும் வாக்குச்சீட்டு முறை என்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். இது இந்தியா முழுமைக்கும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்க வேண்டிய கோரிக்கை. ஆகவே இதை இந்தியா கூட்டணி பெருமளவில் மக்களை திரட்டி போராட்டத்தை முன்னெடுக்கும். 

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களை தொழிற்சங்க தலைவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை கனிவாக கேட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பண்டிகை நாள் என்பதால் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பாஜக தரப்பினர் மற்றும் அவர்களுக்கு ஒத்து ஊதுகின்ற உதிரி கட்சிகள் தொடர்ந்து இந்திய கூட்டணி குறித்த கருத்துகளை பரப்பி வருகிறார்கள். இது இந்தியா கூட்டணி மீது அவர்களுக்கு உள்ள அச்சத்தை காட்டுகிறது. இந்தியக் கூட்டணியில் சிறு சிறு முரண்பாடுகள் உள்ளது தான். பல மாநில கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய கூட்டணியில் முரண்பாடுகள் இருப்பதை தவிர்க்க முடியாது. எந்த வகையிலும் இந்தியா கூட்டணியில் கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும். பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியும். இதிலிருந்து திமுகவோ அதன் கூட்டணி கட்சிகளோ வெளியேற வாய்ப்பே இல்லை. இந்திய கூட்டணி தமிழகத்திலும் கூட்டம் நடத்த கட்டாயம் வாய்ப்பு உண்டு. 

விசிக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பதை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரிவிக்கப்படும்' என்றார்.