Skip to main content

காங்கிரஸின் குப்பைகள் எங்களுக்குத் தேவையில்லை - அரவிந்த் கெஜ்ரிவால் தடாலடி!

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

aravind kejriwal

 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி இந்த மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சிகள் புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. அதேபோல் எதிர்க்கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கத் தொடங்கியுள்ளன.

 

இந்தநிலையில் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி அம்மாநிலத்திற்குச் சுற்றுப்பயணம் செய்து வரும் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என நேற்று அறிவித்தார்.

 

இந்தநிலையில் இன்று ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் பள்ளிகளை மேம்படுத்துவோம் எனவும், ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் பல காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்களோடு தொடர்பில் இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது; டெல்லி அரசுப் பள்ளிகளை மேம்படுத்தியது போல் பஞ்சாப் அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்துவோம். அதை எப்படி செய்வது என்று எங்களுக்கு மட்டுமே தெரியும், வேறு எந்த கட்சிக்கும் தெரியாது. ஆசிரியர்களின் பல பிரச்சனைகளை அவசரகால அடிப்படையில் தீர்ப்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

 

18 வருட அனுபவத்திற்குப் பிறகும், பஞ்சாப் ஆசிரியர்கள் அதிகபட்சமாக ரூ.10,000 மட்டுமே சம்பளமாகப் பெறுகிறார்கள். டெல்லியில், திறமையற்ற தொழிலாளர்களுக்கு கூட குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,000. அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.இலவச மின்சாரம் வழங்குவதாக பஞ்சாப் முதல்வர் சன்னி உறுதியளித்தார், இன்னும் எதுவும் நடக்கவில்லை. மொஹல்லா கிளினிக்குகளைப் பற்றி அவர் பேசினார் ஆனால் ஒன்று கூட அமைக்கப்படவில்லை. ஊழலை ஒழிப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

 

காங்கிரஸில் உள்ள பலர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். ஆனால் அவர்களின் குப்பைகளை நாங்கள் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நாங்கள் அதைச் செய்யத் தொடங்கினால், மாலைக்குள் 25 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் (பஞ்சாபில்) எங்களுடன் இணைவார்கள் என்று நான் சவால் விடுவேன். அவர்களின் 25 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2-3 எம்.பி.க்கள் எங்களோடு தொடர்பில் உள்ளதோடு எங்களுடன் சேர விரும்புகிறார்கள்.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.