Advertisment

வக்பு குழு அறிக்கை தாக்கல்; நாடாளுமன்றத்தில் அமளி!

Waqf Committee report submitted Parliament adjourned

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ரயில்வே துறைக்கு அடுத்தப்படியாக வக்பு வாரியத்தின் கீழ் தான் அதிக சொத்துக்கள் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை கண்காணிப்பதற்காக 1954ஆம் ஆண்டி வக்பு சட்டம் கொண்டுவரப்பட்டு, 1958ஆம் ஆண்டில் அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் அமைக்கப்பட்டது. அன்று முதல் வக்பு சட்ட விதிகளின்படி, வக்பு வாரிய சொத்துக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவைக் ஆகஸ்ட் 8ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார்.

Advertisment

அந்த மசோதாவில், இஸ்லாமிய பெண்கள், இஸ்லாமியர் அல்லாதோர் வக்பு வாரியத்தில் இடம்பெற செய்வது, வக்பு நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இடம்பெற்றிருந்தன. அப்போது இந்த மசோதாவிற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த சட்டத் திருத்த மசோதாவில் கடும் சர்ச்சைகள் இருக்கும் காரணத்தால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார்.

Advertisment

இத்தகைய சூழலில் தான் வக்பு சட்டத் திருத்த மசோதாவைப் பரிசீலிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் குழுவின் அறிக்கையை அவசரப்படுத்தக் கூடாது எனக் கூறி திமுகவின் எம்.பி. ஆ.ராசா, அப்துல்லா, மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கல்யாண் பானர்ஜி உள்ளிட்டோர் கடும் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து 655 பக்கங்கள் கொண்ட வக்பு சட்டத்திருத்த மசோதா அறிக்கைக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வக்பு திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை இன்று (13.02.2025) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடாளுமன்ற மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதே போன்று மாநிலங்களவை காலை 11.20 மணி வரை என 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வக்பு மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை குறித்து, திமுக எம்பி முகமது அப்துல்லா கூறுகையில், “நாங்கள் அதை ஏற்க மாட்டோம். ஆரம்பத்திலிருந்தே அது எங்கள் நிலைப்பாடாக இருந்து வருகிறது. கூட்டுக்குழு அறிக்கைகளிலிருந்து எங்கள் எதிர்ப்புக் குறிப்புகளின் சில பகுதிகள் நீக்கப்பட்டன. மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரிடம் நாங்கள் மேல்முறையீடு செய்வோம்” எனத் தெரிவித்திருந்தார்.

Parliament waqf
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe