மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால் மணிப்பூர் மாநிலமே கலவர பூமியாக மாறியது.
கலவரம் சற்று ஓய்ந்திருந்த சூழலில் தான் மணிப்பூரில் ஜெரிபாம் மாவட்டத்தில் கடத்திச் செல்லப்பட்ட மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் மீண்டும் வன்முறைகள் வெடித்திருக்கிறது. இதனால் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. முன்னதாக மணிப்பூர் மாநிலத்தில் ஆங்காங்கே இணையதள சேவைகள் முடக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக இம்பால் மேற்கு, கிழக்கு, பிஷ்ணுபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மெய்தி குக்கி இன மக்களிடையே வன்முறைகள் வெடித்து வருவது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மணிப்பூரில் அரங்கேறி வரும் கலவரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'மணிப்பூரில் கடந்த 18 மாதங்களாக நிலவிவரும் கடுமையான கலவர சூழலில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூருக்கு பிரதமர் மோடி வர மறுப்பது யாராலும் அறிந்து கொள்ள முடியாதது. அரசியலமைப்பின் பாதுகாவலர் என்ற முறையில் அரசியலமைப்பு சட்டத்தினை நிலைநிறுத்தி உயிர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் தலையீட்டில் மணிப்பூர் மக்கள் மீண்டும் வீடுகளில் கண்ணியத்துடன் பாதுகாப்பாக வாழ்வார்கள் என நம்புகிறேன்' என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.