கறி விருந்திற்காக அடித்துக்கொண்ட தொண்டர்களின் செயல் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் சிரோலு பகுதியில், மாநிலத்தை ஆளும் கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் கூட்டம் நடைபெற்றது.கூட்டம் முடிந்த பிறகு தொண்டர்களுக்காக கட்சியின் தலைமை சார்பில் கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதிர்பார்த்ததை விட அதிகளவில் தொண்டர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
அதனால் பலருக்கு சாப்பாடு கிடைக்காத நிலை ஏற்பட்டதால், பலரும் சாப்பாட்டிற்காகவும், கறிக்காகவும் சண்டையிட்டுக்கொண்டனர். இன்னும் சில தொண்டர்கள் கறிக் குழம்பு இருந்த அண்டாவை தனியாக நகர்த்திச் சென்றனர். தொடர்ந்து கூட்டத்தில் கறிக்காக தொண்டர்கள் சண்டையிட்டுக் கொண்டதால் பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர் கூட்டத்தைக் கலைத்தனர்.