Skip to main content

"நாட்டின் 60 சதவீத பேரின் குரல்கள் அவமானப்படுத்தப்பட்டது" - எதிர்க்கட்சிகளின் பேரணிக்கு பிறகு ராகுல் காந்தி!

Published on 12/08/2021 | Edited on 12/08/2021

 

rahul gandhi

 

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளைவரை (13.08.2021) நடைபெறவிருந்த நிலையில், பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கிவந்ததால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மத்திய அரசு நேற்றோடு முடிவுக்கு கொண்டுவந்தது.

 

இதனைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தும் பதாகைகளையும், பெகாசஸ் குறித்து விசாரணை நடத்தக் கோரும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

 

பேரணியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "நாடாளுமன்றதிற்குள் பேச அனுமதிக்கப்படாததால், உங்களிடம் (ஊடகங்களிடம்) பேசவந்துள்ளோம். நாடாளுமன்றதிற்குள் பேச அனுமதிக்கப்படாதது ஜனநாயகப் படுகொலை. மாநிலங்களவையில் எம்.பிக்கள் முதன்முறையாக தாக்கப்பட்டுள்ளனர்; தள்ளிவிடப்பட்டுள்ளனர். சபாநாயகர் தான் வருத்தப்படுவதாகக் கூறுகிறார். ஆனால், சபையை சுமுகமாக நடத்துவது அவரது பொறுப்புதானே? அதை ஏன் அவரால் செய்ய முடியவில்லை?" என கேள்வியெழுப்பினார்.

 

தொடர்ந்து அவர், "நாடளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்துவிட்டது. ஆனால் நாட்டின் அறுபது சதவீதம் பேரைப் பொறுத்தவரை, நாடாளுமன்றம் நடைபெறவில்லை. நாட்டின் அறுபது சதவீத குரல்கள் நேற்று நசுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டன" என தெரிவித்தார்.

 

பேரணியில் கலந்துகொண்ட சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், "நாடாளுமன்றத்தில் தங்களது கருத்துக்களை முன்வைக்க எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பெண் எம்.பிக்களுக்கு எதிரான நேற்றைய சம்பவம் ஜனநாயகத்திற்கு எதிரானது. பாகிஸ்தான் எல்லையில் நாங்கள் நிற்பது போன்று இருந்தது" என கூறினார்.

 

பொது காப்பீடு வர்த்தக தேசியமயமாக்கல் திருத்த மசோதாவை மத்திய அரசு மாநிலங்களவையில் நிறைவேற்றியபோது, சபாநாயகர் இருக்கைக்கு அருகே அமளியில் ஈடுபட்ட பெண் எம்.பிக்களை அவை பாதுகாவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளதும், தன்னுடைய 55 வருட நாடாளுமன்ற வாழ்க்கையில் சக பெண் எம்.பிக்கள் தாக்கப்படுவதைப் பார்த்ததில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.