VK Pandian service is immense says Naveen Patnaik

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை கிடைக்காததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைக்கிறது பாஜக. நாடாளுமன்றத்தேர்தலுடன் சேர்ந்து ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டமன்றத்தேர்தலும்நடந்தது. இதில் 25 ஆண்டுகளாக ஒடிசா மாநிலத்தை ஆண்டு வந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதளம் கட்சியைப் பாஜக தனிபெரும்பான்மையில் வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஓடிசாவில் நவீன் பட்நாயக்கின் வலதுகரம் போன்று தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் செயல்பட்டு வந்தார். மேலும் வி.கே.பாண்டியன் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என்று பேசப்பட்டது. தேர்தல் பரப்புரையின் போது பாஜக வி.கே.பாண்டியனை மையமாக வைத்தே பேசிவந்தது. அமித்ஷா, ஓடிசாவை ஒரு தமிழர் ஆளவேண்டுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் பிஜூ ஜனதா தளம் கட்சி தோற்றதற்கு வி.கே.பாண்டியனே காரணம் என்று பலரும் கூறிவந்தனர்.

Advertisment

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நவீன் பட்நாயக், “வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது. நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள். கடந்த 10 ஆண்டாக பல துறைகளில் வி.கே.பாண்டியன் சிறப்பாக உள்ளார். வி.கே.பாண்டியன் கடும் உழைப்பாளி. கடந்த இரண்டு புயல் காலங்களிலும், கொரோனா காலத்திலும் அவர் செய்த சேவை மகத்தானது. தேர்தலில் மக்களின் முடிவை பணிவோடு ஏற்றுகொள்கிறேன்” என்றார்.