Skip to main content

விஸ்வகர்மா திட்டம்; எதிர்ப்பும் ஆதரவும்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Vishwakarma Scheme; Resistance and support

 

நாட்டின் 77வது சுதந்திர தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை அறிவித்தார். அந்த உரையில் பேசிய மோடி, “இந்தியா முழுவதும் உள்ள கைவினை கலைஞர்களுக்கு நிதி உதவி, திறன் பயிற்சி, திறம் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற உதவிகளை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். பிரதமர் மோடி அறிவித்த இந்த திட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி  மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 

 

இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. குறிப்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திராவிடர் கழகம் சார்பில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக துணை செயலாளர் ஆ.ராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், “இது சாதிய கட்டமைப்பை நிலைப்படுத்துவதற்கான ஒரு முயற்சி. திறன் மேம்பாட்டு பயிற்சி என்பது வேறு. ஆனால், இந்த திட்டத்தில் தொழிலில் திறன் பெற்றவர்களை குலத்தொழிலாளியாக்க என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை பா.ஜ.க வினர் நிறைவேற்றுகின்றனர்” என்று பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய ஆ.ராசா, “சனாதனமும், விஸ்வகர்மா யோஜனா திட்டமும் வேறல்ல. தொழிலை வளர்ப்பது சமூகத்துக்கு தேவை. ஆனால், அது குலத்தொழிலோடு சேர்த்து சாதியாக பிரிக்கப்படுகிறது. இவர் மகன் இந்த தொழில் தான் பார்க்க வேண்டும் என்னும் குலத்தொழிலை ஒழிக்கும் கட்டாய கடமை நமக்கு இருக்கிறது” என்று கூறினார்.  

 

இந்த நிலையில், டெல்லியின் துவாரகாவில் யசோ பூமி என பெயரிடப்பட்டுள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி திறந்து வைத்தார். துவாரகா பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மோடி, “விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் வங்கி உத்தரவாதம் ஏதுமின்றி ரூ.3 லட்சம் வரை மத்திய அரசு கடன் வழங்கும். இதற்கான வட்டியும் மிகவும் குறைவு. முதலில் ரூ.1 லட்சம் கடனாக வழங்கப்படும், அந்த தொகையை திருப்பி செலுத்தியதும் மீதமுள்ள ரூ.2 லட்சம் ரூபாய் கடனாக அளிக்கப்படும்” என்று கூறினார். இந்த திட்டம் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இந்த திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள் அதற்கான இணைய சேவையில் முன்பதிவு செய்ய வேண்டும். இதன்படி அடையாள அட்டை, விஸ்வகர்மா சான்றிதழ் வழங்கப்படும்’ என்று கூறியிருந்தது. 

 

இந்த திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்தவண்ணம் இருக்கிறது. அந்த வகையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் போது, தொழில்முனைவோரை வளர்ப்பதும் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார். அதனை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “பிரதமரின் ஒவ்வொரு திட்டங்களும் இதுவரை சென்றடையாதவர்களைச் சென்றடைவதை நோக்கமாக கொண்டவை. இந்த திட்டத்தின் மூலம், கைவினை கலைஞர்களுக்கு  சில உதவிகளை வழங்க முடியும். அவர்களின் பங்களிப்பிலிருந்து நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்” என்று கூறினார்.

 

இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்து இது குறித்து பேசினார். அதில் அவர், “ அப்போது இருந்த காங்கிரஸ் முதல்வர் ராஜாஜி, அரை நாள் பள்ளி, பின்னர் தந்தை செய்யும் தொழிலில் பயிற்சி என்று திட்டத்தை கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த அந்த திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. இன்னும் கூற வேண்டுமென்றால் காமராஜரே அந்த திட்டத்தை எதிர்த்தார். ராஜாஜி கொண்டு வந்த அவரது கல்வி திட்டத்திற்கு எந்தவிதமான பெயரும் சூட்டவில்லை. ஆனால், நாங்கள் தான் அதனை குலக்கல்வித் திட்டம் என குறிப்பிட்டோம்.

 

ராஜாஜி கொண்டு வந்த அதே திட்டத்தை தான் இப்போது பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். இளைஞர்கள் 18 வயதை கடந்த பின்பு சுய தொழில் செய்ய வங்கி கடன் திட்டம் என்பது அந்த சமூக இளைஞர்களின் கல்லூரி மற்றும் உயர் கல்வி திட்டத்தை தடுக்கும். மேலும், குலக்கல்வி முறையே இளைஞர்களை உயர்கல்வி படிக்கவிடாமல் தடுப்பதற்கான சதிச்செயல் திட்டம். இது மோசமான நடவடிக்கை. மோடி அறிவித்துள்ள இந்தத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்” என்று கூறினார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.