இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் புகைப்படம் உத்திர பிரேதச மாநிலம் கோரக்பூர் இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த பூத் ஸ்லிப் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் பற்றி தேர்தல் அலுவலருக்கு, மாவட்ட நீதிபதியின் மூலம் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி பிரபானந்த், "இதற்கு யார் காரணம், என்ன நடந்துள்ளது போன்ற அனைத்து விபரங்களையும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்க உத்தரவிட்டிருக்கிறேன்" என்றார். "இதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கப்படும்" என்றும் கூறியுள்ளார்.
கிடைத்த தகவலின் படி, பூத் அலுவலர் சுனிதா வாக்காளர்சீட்டுகளை மக்களுக்கு தருவதற்காக பிரித்து கொடுத்திருக்கிறார். அப்போதுதான் இந்த விராத் கோலியின் புகைப்படம் கொண்ட பூத் சீட்டை பார்த்து வியந்துள்ளார். சுனிதாவும் இந்த வாக்காளர் சீட்டில் உள்ளதுபோல் ஏதேனும் நபர் உண்மையில் இருக்கிறாரா என்று விசாரித்துள்ளார். கடைசியில் எவரும் அங்கு விராத் கோலி என்ற பெயரில் இல்லை என்பதை கண்டுபிடித்து மாவட்ட நீதிபதிக்கு தெரிவித்துள்ளார்.
அந்த பூத் சீட்டில், விராத் கோலி சட்டமன்ற தேர்தலில் கோரக்பூர் பகுதியின் வாக்காளர் என்றும், வாக்காளர் எண் 822, வாக்களிக்க போகும் பூத் சஜன்வா என்னும் ஊரில் இருக்கும் ஒரு ஆரம்ப பள்ளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுபோன்று பல பிரபலங்களின் புகைப்படங்கள் பல ஆவணங்களில் தவறுதலாக இடம்பெறுள்ளன. தமிழகத்தில் ஒரு முறை விநாயகர் உருவமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
உபி மாநிலத்தில் விராத் கோலிக்கு வாக்குசீட்டு!!!
சார்ந்த செய்திகள்
Next Story
“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.
எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்
நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.
Next Story
வேட்புமனு தாக்கல் செய்த தயாநிதி மாறன் (படங்கள்)
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. இன்று கடைசி நாள் என்பதால் ஸ்டார் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் இன்று மனுத்தாக்கல் செய்தார். செனாய் நகரில் உள்ள மண்டல அலுவலகம் 8ல் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிற்றரசு வெற்றியழகன், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.