பிரக்யான் ரோவரை தொடர்ந்து உறக்க நிலைக்கு சென்ற விக்ரம் லேண்டர்!

 Vikram Lander went to sleep following Pragyan Rove

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்தஆகஸ்ட் 23 ஆம் தேதிமாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.

இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வந்தது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும் பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து ரோவர் செயல்பாடு குறித்து இஸ்ரோ தெரிவிக்கையில், “நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் மூலம் தரையிரங்கிய பிரக்யான் ரோவர் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. பிரக்யான் ரோவர், தனது பணிகளை நிறைவு செய்துவிட்டு, பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் முறைக்கு (sleep mode) மாற்றப்பட்டுள்ளது. பிரக்யான் ரோவரில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. நிலவில் மேற்கொண்ட ஆய்வின் தரவுகளை விக்ரம் லேண்டர் மூலமாக பூமிக்கு அனுப்பியுள்ளது. அடுத்த சூரிய உதயமாகும் செப்டம்பர் 22 ஆம் தேதி ஒளியைப் பெரும் வகையில் சோலார் பேனல்கள் ஆயத்தமாக்கப்பட்டு, மீண்டும் பணியை தொடங்க வாய்ப்புள்ளது. ஒரு வேளை சூரிய ஒளி படாத பட்சத்தில் இந்தியாவின் நிரந்தர தூதராக நிலவில் பிரக்யான் ரோவர் ஆழ்ந்த நித்திரை கொள்ளும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 Vikram Lander went to sleep following Pragyan Rove

இந்நிலையில் நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டு உறக்க நிலைக்கு (sleep mode) சென்றுள்ளதாகவும், விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் செப்டம்பர் 22 ஆம் தேதி மீண்டும் செயல்பட தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ISRO
இதையும் படியுங்கள்
Subscribe