Skip to main content

உளவு பார்த்த போலீஸ்... டி.எஸ்.பி.-யை கொன்று எரிக்கத் திட்டமிட்ட விகாஸ் தூபே... விசாரணையில் வெளியான தகவல்...

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

vikas dubey confession to police

 

தனது கிராமத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த காவலர்களின் உடலை எரித்துச் சாம்பலாக்கி ஆதாரங்களை அழிப்பதற்குத் திட்டமிட்டிருந்ததாக விகாஸ் தூபே விசாரணையில் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில், கொலை, கொள்ளை என 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த விகாஸ் தூபே என்ற ரவுடியைக் கடந்த வாரம் போலீஸார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் டி.எஸ்.பி. உள்ளிட்ட எட்டு போலீஸார் உயிரிழந்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த விகாஸ் தூபே மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் நேற்று (09/07/2020) கைதானார். அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய மத்தியப்பிரதேச போலீஸார், பின்னர் உத்தரப்பிரதேச போலீஸாரிடம் விகாஸ் தூபேவை ஒப்படைத்தனர். மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து பாதுகாப்புடன் போலீஸார் அழைத்து வரும் போது விகாஸ் தூபே இருந்த வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தைப் பயன்படுத்தித் தப்பிக்க முயன்ற விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் போலீஸார் விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்களை விகாஸ் தூபே தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சவுபேபூர் காவல் நிலையப் போலீஸார் சிலருடன் நட்பிலிருந்த விகாஸ் தூபே, தனக்கு எதிராகச் செயல்பட்ட டி.எஸ்.பி.-யான தேவேந்திர மிஸ்ராவை கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளார். இந்தச் சூழலில், ஜூலை இரண்டாம் தேதி நள்ளிரவு தேவேந்திர மிஸ்ரா தலைமையில் ஒரு போலீஸ் படை தம்மைக் கைது செய்ய வருவதாக விகாஸுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு வைத்தே தேவேந்திர மிஸ்ராவைக் கொல்லத் திட்டத்திட்ட விகாஸ், அவரை கொன்றபின் ஆதாரங்களை அழிக்கும் வகையில், அவரது உடலை எரிக்கவும் திட்டமிட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். உடலை எரிப்பதற்காகச் சுமார் 15 லிட்டர் எரிபொருளை வாங்கி வைத்துள்ளார் விகாஸ்.

 

இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி அங்கு வந்த காவல்துறையினரைத் தனது கூட்டாளிகளின் உதவியோடு சுட்டுக் கொன்ற விகாஸ், அவர்களது உடலை எரிக்க முடியாத சூழலில், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணையில் தெரிவிக்கையில், "நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். அந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதால் தான் எனக்கு இந்த நிலைமை. இதை நான் செய்திருக்கக் கூடாது" என விகாஸ் கண்ணீர்விட்டு அழுததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விகாஸுக்கு உளவு கூறிய சவுபேபூரின் ஆய்வாளர் வினய் திவாரி, துணை ஆய்வாளர் கே.கே.சர்மாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.