
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று(12.6.2025) மதியம் 1.39 மணிக்கு பேயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் லண்டனை நோக்கி புறப்பட்டது. 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு விமான கேப்டன் சுமீத் சபர்வால் விமான கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு மேடே அழைப்பை(விமானம் பேராபத்தைச் சந்திக்கும் சமிக்ஞையாகும்) விடுத்துள்ளார்.
இதையடுத்து விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேப்டன் சுமீத் சபர்வாலை தொடர்பு கொள்ள முயன்றபோது, தொடர்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள் விமானம் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். அவரை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த பயணிகளில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர். லண்டனில் உள்ள தனது மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது. கணவர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு இன்று லண்டனில் இருந்து அவரது மகள் மற்றும் மனைவி குஜராத் வந்தடைந்துள்ளனர்.
இந்த நிலையில் விஜய் ரூபானி அதிர்ஷ்ட எண்ணும், அவர் மரணமடைந்த தினமும் ஒத்துப்போவதாகப் பலர் பகிர்ந்து வருகின்றனர். விஜய் ரூபானி ‘1206’ என்ற எண்ணை தனது அதிர்ஷ்ட எண்ணாக கருதினார் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக தன்னுடைய அனைத்து வாகனங்களுக்கு ஒரு மாதிரியான ‘1206’ என்ற எண்ணையே பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினமான 12.06.2025 அன்று விஜய் ரூபானி விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். அந்த தேதியிலும் ‘1206’ இருப்பதால், விஜய் ரூபானியின் அதிர்ஷ்ட எண்ணே அவரது இறுதி நாளுக்கான தேதியாக மாறி இருப்பது பலருக்கு சோகத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.