Skip to main content

மாட்டிறைச்சி விற்பனைக்கு தடைகோரி திரிபுராவில் வி.எச்.பி. போராட்டம்!

Published on 02/04/2018 | Edited on 02/04/2018

மாட்டிறைச்சி விற்பனைக்கு எதிராக வி.எச்.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

VHP

 

திரிபுரா மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அங்கு பா.ஜ.க. தலைமையிலான அரசு ஆட்சியில் அமருவதற்கு முன்பாகவே மாநிலம் முழுவதும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர் பா.ஜ.க.வினர். இந்நிலையில், திரிபுரா மாநிலம் வங்காளதேச எல்லையில் உள்ள ஜோய்நகர் பகுதியில் விஸ்வ இந்து பரிஷித் மற்றும் பஜிரங்தள் அமைப்பைச் சேர்ந்த சிலர் மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை கோரி முழக்கமிட்டனர். மேலும், மாட்டிறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்காமல் விட்டால், மாபெரும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என அவர்கள் எச்சரித்தனர்.

 

அவர்களில் சிலர் சிபிஎம் ஆட்சிக்காலத்தில் வங்காளதேசம் மாநிலத்தில் இருந்து வந்த சிலர்தான் மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம்சாட்டினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் கூட்டத்தைக் கலைத்தனர்.

 

திரிபுரா மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் சுனில் தியோதர், ‘வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் பெரும்பாலான பொதுமக்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள். எனவே, இங்கு மாட்டிறைச்சிக்கு தடை என்பது நடைமுறைக்கு வராது’ எனக் கூறியிருந்தார். மேலும், கடந்த ஆண்டு மாட்டிறைச்சி விற்க மத்திய அரசு தடைவிதித்தபோது, ‘இது பெரும்பாலான மக்களின் உணர்வுகளுக்கு எதிரான நடவடிக்கை’ எனக்கூறி மாணிக் சர்க்கார் அரசு எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

அக்பர், சீதா சர்ச்சை; அதிகாரி மீது திரிபுரா அரசு அதிரடி நடவடிக்கை

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Tripura Govt action against named officer on Akbar, Sita lions Controversy

மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இந்த பூங்காவிற்கு, கடந்த 12 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ என்றும் முன்னரே பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த இரண்டு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, ‘சீதா’ மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘முகலாய மன்னரின் பெயரான அக்பர் என்ற பெயரையும் ராமாயணத்தில் வரும் சீதாவின் பெயரையும் சிங்கங்களுக்கு வைத்து ஒரே இடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்து மத வழக்கங்களில் சீதா தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். அதனால் அந்த சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா அமர்வில் கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “சிங்கத்துக்கு அக்பர் என்று பெயர் வைப்பதை சீதா மட்டுமல்ல நானும் ஆதரிக்கவில்லை. இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர், மத போராளிகள், மரியாதைக்குரியவர்கள் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாம். எனவே, சர்ச்சைகளைத் தவிர்க்க இரண்டு சிங்கங்களுக்கு வேறு பெயர்களை வைக்க வேண்டும்” என்று கூறி மாநில அரசிற்கு உத்தரவிட்டார். 

இந்த நிலையில், திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் வைக்கப்பட்டதற்காக, அம்மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை திரிபுரா அரசு இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

Next Story

இரு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

New governors appointed for two states

 

ஒடிசா, திரிபுரா என இரு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

 

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஒடிசா மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் ஒடிசா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த பாஜகவை சேர்ந்த இந்திரா சேனா ரெட்டி நல்லு திரிபுரா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரகுபர் தாஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்தவர் ஆவார். மேலும் திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இந்திரா சேனா ரெட்டி நல்லு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.