Skip to main content

"ஷேம்... ஷேம்... மர்டர்... மர்டர்... மர்டர்..." - எதிர்ப்புகளுக்கிடையே முழங்கிய வைகோ! 

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவை திரும்பப் பெறும் தீர்மானம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பெற்றது. இதன் மீதான விவாதத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, இந்த முடிவை கடுமையாக எதிர்த்தார்.

 

vaiko



அவரது பேச்சில் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்தார். "சுதந்திரம் பெற்றதில் இருந்து இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பல முறை ஜனநாயகத்தை கொன்றுள்ளது. எனது நண்பர் ஃபரூக் அப்துல்லா ஒரு நாள் அதிகாலையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது திடீரென அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது நான் அவரிடம் கூறினேன், "நீங்கள் உங்கள் தந்தை சொன்ன வார்த்தைகளை மறந்துவிட்டீர்கள்". 1980இல் ஃபரூக் அப்துல்லா தனது தந்தை ஷேக் அப்துல்லாவிடம் என்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்தபொழுது, ஷேக் அப்துல்லா சொன்னார், "தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் என் இளம் நண்பனே, ஒன்றை மட்டும் எப்போதும் நினைவுகொள் இந்திய அரசியல் அகராதியில், காங்கிரஸ் கட்சிக்கு நட்பு, நன்றியுணர்வு ஆகிய இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இடமில்லை" என்று. அதை நான் ஃபரூக்கிற்கு நினைவூட்டினேன்" என்று மிகவும் உணர்வுப்பூர்வமாகப் பேசினார்.


மேலும் "கார்கில் போரில் எங்கள் தமிழ் வீரர்கள் பலர் உயிர்த்தியாகம் செய்தார்கள். இன்று என்ன ஆனது? ஒரு பக்கம் தாலிபான், ஒரு பக்கம் அல்-கொய்தா என தீவிரவாதத்தால் சூழப்பட்டிருக்கிறது. நீங்கள் மேலும் அதற்கு ஆபத்தை விளைவித்திருக்கிறீர்கள். இன்று நீங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவு உலகில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நாடுகளுக்கு துருப்புச்சீட்டாக அமையும். கிழக்கு தைமூர், தெற்கு சூடான் போல காஷ்மீர் ஆவதற்கு வாய்ப்பை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். என் நெஞ்சம் பற்றி எரிகிறது. காஷ்மீர் மக்கள் மனது எரிகிறது. காஷ்மீர் மாநில அரசுகளை மாற்றி மாற்றி ஜனநாயகத்தில் விளையாடிய காங்கிரஸ் கட்சியும் இதில் முக்கிய குற்றவாளிதான்" என்று ஆவேசமாகப் பேசினார் வைகோ.

அவரது பேச்சினிடையே சலசலப்பு எழுந்தபொழுது, குரலை உயர்த்தி "ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய ஒவ்வொருவரும் என் பேச்சை கவனியுங்கள். உங்களுக்கு எதிர்க்கருத்து இருக்கலாம், பரவாயில்லை. ஆனால், என் கருத்தைக் கேளுங்கள்" என்று அழுத்தமாகக் கூறினார். இறுதியாக, "இந்த நாள் இந்தியாவின் தலைகுனிவுக்குரிய நாள்... ஷேம்... ஷேம்... ஷேம்... இது ஜனநாயகக் கொலை... மர்டர்" என்று அவர் கூறிய போது அவையில் சில உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஒலி எழுப்பினர். அப்போது மீண்டும் "மர்டர்... மர்டர்... மர்டர்..." என்று மூன்று முறை கூறி கொந்தளிப்பு அடங்காமலேயே அமர்ந்தார் வைகோ.                             
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Next Story

“சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர்” - முத்தரசன் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Mutharasan condoles the demise of MP Ganesamoorthy

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக இருந்த மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், ஈரோடு மாவட்ட மூத்த அரசியல் முன்னோடியுமான அ. கணேச மூர்த்தி எம்.பி. (77) இன்று (28.03.2024) அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார் என்று துயரச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஈரோடு அருகில் உள்ள அவல் பூந்துறை, கவுண்டிச்சிபாளையம் என்ற ஊரில் செல்வாக்கு பெற்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெருந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து சென்னையில் உயர் கல்வி பெற்றவர்.

கல்லூரி கல்வி பயின்ற காலத்தில் தமிழ் மொழி பற்று, தேசிய இனங்கள், தமிழர் தனித்துவ பண்புகள் குறித்த அறிஞர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தி.மு.கழக மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்படத் தொடங்கியவர். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக உயர்ந்தார். கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி தி.மு.கழக வேட்பாளராகத் தேர்தல் களம் இறங்கியவர். முதல் மூன்று முறை தொடர்ந்து தோல்வி அடைந்த போதும் கொள்கையில் நிலைகுலையாமல் பயணித்தவர்.

1977 முதல் 1992 வரையான காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த நெருக்கடிகளை முன்னின்று எதிர் கொண்டவர். 1980களின் ஆரம்பத்தில் திமுக மாநில சிறப்பு மாநாடு நடத்தி தலைவர் கலைஞரிடம் 33 லட்சத்து 33 ஆயிரத்து 333 ரூபாய் நிதி வழங்கிய பெருமைக்குரியவர். கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் பேராதரவு பெற்று  தி.மு.கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர். 1989 மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.

கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து வைகோவுடன் இணைந்து மறுமலர்ச்சி தி.மு.கழகம் உருவாக்கியவர்களில் அ. கணேசமூர்த்தி குறிப்பிடத்தக்கவர். பொடா சட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர். பழனி மக்களவைத் தொகுதியில் இருந்து இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வந்தவர். கட்சியின் உயர் பொறுப்புகளிலும் பணியாற்றியவர். உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ. கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. பொதுவாழ்வு பணிகளை ஒருங்கிணைக்கும் தலைமை பண்புமிக்க ஒருவரை ஈரோடு மாவட்டம் பறிகொடுத்து விட்டது.

அ. கணேசமூர்த்தியின் வாழ்விணையர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு கபிலன் என்ற மகனும் தமிழ் பிரியா என்கிற மகளும் பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். அ. கணேசேமூர்த்தியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.