Skip to main content

சாலையில் சென்ற பாஜக பிரமுகர்; துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

uttarpradesh Bjp member passed away

 

பா.ஜ.க விவசாயப் பிரிவு தலைவரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அனுஜ் செளத்ரி.  இவர் பா.ஜ.க-வில் விவசாய சங்கத் தலைவராக உள்ளார். இவர் நேற்று (10-08-23) மாலை அன்று தனது சகோதரருடன் மாஜ்ஹோலா பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள் அனுஜ் செளத்ரியைக் கடுமையாகத் தாக்கி, அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அனுஜ் செளத்ரியை அவரது சகோதரர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், செல்லும் வழியிலேயே அனுஜ் செளத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில், அரசியல் முன்விரோதம் காரணமாக அனுஜ் செளத்ரியை கொலை செய்துள்ளனர் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, "இந்த வழக்கில் அனுஜ் செளத்ரியின் முன்விரோதக்காரர்கள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய குற்றவாளிகளைக் கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரமாகத் தேடி வருகின்றோம். தேடப்படும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்