நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், பீகார், அசாம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு கோடி மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் இது வரை 170- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மட்டும் 72 பேர் உயிரிழந்துள்ளனர். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 59 பேர் புதையுண்ட நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உத்தரகாண்ட மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடு ஒன்று இடிந்து விழும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள லங்கி கிராமத்தில் ஆற்றின் கரையோரம் இருந்த வீடு ஒன்று மழை வெள்ளம் காரணமாக திடீரென சரிந்து விழுந்தது. அந்த வீட்டில் எத்தனை பேர் இருந்தார்கள்? அல்லது வீட்டில் யாருமே இல்லையா? என்பது தொடர்பான தகவல் வெளியாகவில்லை. வீடு இடிந்து விழும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.