வட மாநிலங்களான மகாராஷ்டிரா, அஸ்ஸாம், பீகார், இமாச்சல் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 80 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.அம்மாநிலத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.
இதில் முன்சியாரி நகரில் கோரிப்பூர் பகுதியில் நிலச்சரிவால் பாறைகள் சாலையில் விழுந்தன. இதனால் அந்த வழியே செல்பவர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதன் காரணமாக சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உச்சைதி நகரில் போதி கிராமத்தில் இருந்து படிக்க செல்லும் மாணவர்கள் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட சாலை வழியே நடந்து சென்று தங்களது கல்லூரியை அடைந்தனர். எப்போது நிலச்சரிவு ஏற்படும் என்று யாருக்கும் தெரியாத நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட சாலையில், ஆபத்தை உணராமல் கல்லூரி மாணவர்கள் நடந்து செல்லும் வீடியோ காட்சி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.