Skip to main content

உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்... காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் உட்கட்சி பூசல்...!

Published on 13/01/2022 | Edited on 14/01/2022

 

 

uttarakhand assembly election 2022 congress leaders


உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்ட நிலையிலும், காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் ஓய்வதாக இல்லை. என்னதான் நடக்கிறது உத்தரகாண்ட் மாநில தேர்தல் களத்தில் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி 14- ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் உட்கட்சி பூசல் ஓய்வதாக இல்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரகாண்ட் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் முன்னாள் முதலமைச்சர் ஹரீஷ் ராவத்திற்கும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கணேஷ் கொடியாலுக்கும் இடையே மோதல் எழுந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலையிட வேண்டியிருந்தது. 

uttarakhand assembly election 2022 congress leaders

அடுத்த பிரச்சனையாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிஷோர் உபாத்தியாயாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காங்கிரஸ் தலைமை நீக்கியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு மற்றும் உயர்மட்ட குழு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்து வரும் இவர், கட்சி விரோத செயலிகளில் ஈடுபட்டதாகக் கூறி நீக்கப்பட்டார். 

 

தேர்தல் பரப்புரை சூடுபிடித்திருக்கும் நேரத்தில் கிஷோர் உபாத்தியாயாவின் நீக்கம், உத்தரகாண்ட் மாநில அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இவருடைய ஆதரவாளர்கள் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகலாம் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில், பிரச்சனைகளை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர காங்கிரஸ் கட்சித் தலைமை முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. 

uttarakhand assembly election 2022 congress leaders

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான மோகன் பிரகாஷை, உத்தரகாண்ட் மாநில தேர்தல் மேற்பார்வையாளராக அக்கட்சி நியமித்தது. தற்போதுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கட்சி தாவல்களைத் தடுக்க முடியும் என்று அக்கட்சி நம்புகிறது. 

 

இன்னும் ஒரு வாரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ள நிலையில், வரும் வாரங்களில் உட்கட்சிப் பூசல் வெடிக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திமுகதான் எதிர்க்கட்சி என்பதுபோல் மோடி பிரச்சாரம் செய்கிறார் - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Thirumavalavan alleges Modi is campaigning as if the DMK is the opposition

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செவ்வாய்க் கிழமை(16.4.2024) சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பு.முட்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்களிடம் திருமாவளவன் பேசுகையில், “இந்தத் தேர்தலில், நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர். பாஜக விற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை  ஒருங்கிணைத்து  இன்று வலுவான தேர்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலாக திமுகதான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். கேஸ் விலை உயர்வு மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல்  சாதிய மோதல்கள் அதிகரிக்கவும் மோடி தான் காரணம். மோடி  மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  ரேசன் கடை இருக்காது. 100-நாள் வேலைத்திட்டம் இருக்காது” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன்,  திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர். 

Next Story

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Village cooking channel put an end to rumours

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனலில் வரும் சமையல் வீடியோவில் ‘இன்னைக்கு ஒரு புடி’என்ற வசனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் பெரியதம்பி தாத்தா. இவர் சமீபத்தில் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வில்லேஜ் குக்கிங் சேனல் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் வில்லேஜ் குக்கிங் சேனலில் தோன்றும் தாத்தாவின் மருத்துவ செலவுக்கு உதவ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மறுத்துவிட்டார் என பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த வதந்தியை சுப்ரமணியன் வேலுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் வதந்தியாக பரப்பப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்!. எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது!.

இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சித் தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது கிராமத்துச் சூழலில் ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து சாப்பிட்ட வீடியோ மக்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.