Skip to main content

பெண்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய காவல்துறை; அதிர்ச்சியளிக்கும் வீடியோ

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

Uttar Pradesh police brutally attacked women

 

அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய உத்தரப்பிரதேச போலீசாரின் வீடியோ பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்தியா முழுவதும் அம்பேத்கரின் சிலை உடைக்கப்படும் சம்பவம் பல காலமாக நடந்து வருகிறது. இதில் முதன்மையான உத்தரப்பிரதேச மாநிலத்தை அடுத்து பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அம்பேத்கர் சிலை தகர்க்கப்படுவதும் அதனால் அந்தந்த பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாகும்.  

 

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்தில் அம்பேத்கர் நகர் மாவட்டம் அருகே வாஜித்பூர் என்ற கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு பூங்காவில் பாபாசாகேப் அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டிருந்தது. கடந்த சனிக்கிழமையன்று யாரோ முகம் தெரியாத மர்ம நபர்கள் அம்பேத்கரின் சிலையைச் சேதப்படுத்தியுள்ளனர்.

 

இது குறித்துத் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அம்பேத்கரின் சிலையைச் சுற்றி எல்லைச் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனையடுத்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் திடீரென அவர்கள் மீது தடியடி நடத்தினர். அங்குத் திரண்டிருந்த பெண்கள் மீது, ஈவு இரக்கமின்றி லத்தியாலும், வாழை மட்டையாலும் அங்கிருந்த போலீசார் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 4 போலீசாருக்கும், 5 பெண்களுக்கும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்