Skip to main content

திருவாரூரில் பல்கலைக்கழகம்; லட்சத்தீவில் நுழைவுத்தேர்வு - சு.வெங்கடேசன் எம்.பி தலையீடு

Published on 31/08/2022 | Edited on 31/08/2022

 

University in Tiruvarur, Entrance Exam in Lakshadweep

 

மத்திய பல்கலைக்கழத்தில் சேர மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட நிலையில் எம்.பி வெங்கடேசன் முயற்சியால் 7 மணி நேரத்தில் மாற்றப்பட்டுள்ளது.

 

பதினெட்டாங்குடி கிராமத்தை சேர்ந்த லோகேஸ்வர் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்திருந்த நிலையில் நுழைவுத்தேர்வு எழுத லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதை எம்.பி சு.வெங்கடேசனிடம் மாணவர் முறையிட மாணவருக்கான தேர்வு மையத்தை தமிழகத்திற்கு மாற்றித்தரும் படி மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்திக்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து 7 மணி நேரத்தில்  மாணவருக்கு மதுரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன் "தமிழகத்தில் உள்ள ஒரே மத்திய பல்கலைக்கழகம்  திருவாரூரில் உள்ளது. அதற்கு தேர்வு எழுத தேர்வு மையம் லட்சத்தீவில் போடுவது, மாற்றுத்திறனாளிகளுக்கு மும்பையில் தேர்வு மையம் போடுவது இதையெல்லாம் உடனுக்குடன் தலையிட்டு சரிசெய்கிறோம்.

 

மத்திய அரசு மற்றும் தேர்வு நடத்தும் துறைகள், இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதும் போது தங்களுக்கு அருகில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்களின் மீது தேர்வு நடத்துகிறவர்கள் மனோரீதியான யுத்தத்தை தொடர்ச்சியாக நடத்துகிறார்கள்.  அதே போல நாடு முழுதும் பொது நுழைவுத்தேர்வு என்ற கொள்கையே முற்றிலும் தவறான விஷயம். அந்தந்த மாகாணத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படவேண்டும்" எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

Next Story

பாரதிதாசன் பல்கலை. நுழைவுத் தேர்வில் தொழில் நுட்பக்கோளாறு; மாணவர்கள் அவதி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Ph.D Online Entrance Test conducted by Bharathidasan University Technical disorder

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2024 ஆவது கல்வி ஆண்டுக்கான முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 57 வகையான பாடப்பிரிவுகளில் 1092 மாணவ, மாணவியர் தேர்வுக்கு ரூ.2,000 முதல் ரூ. 2,100 வரை கட்டணமும் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் புகல் 12.15 மணி வரை நுழைவு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தேர்வாளர்களுக்கு தேர்வெழுத பிரத்யேக லாகின் ஐடி(ID) மற்றும் ரகசிய குறீயீடு உள்ளிட்டவைகளும் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து நுழைவு தேர்வு எழுத மாணவ,மாணவியர் பல்கலைக்கழக இணையதள முகவரியில் லாக் இன் செய்தனர். ஆனால் பல்கலைக்கழக இணையதளம் செயல்படவில்லை. இதனால் ஏராளமான மாணவர்கள் நுழைவு தேர்வு எழுத முடியாமல் அவதிக்குள்ளாகினர். 

பின்னர் தொடர்ந்து பல முறை முயற்சி செய்தும் பலன் இல்லை. இதனால் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் செயல்படவில்லை என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சீனிவாச ராகவன் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை முனைவர் பட்ட (பிஎச்டி) நுழைவுத் தேர்வு இணைய வழியில் நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில மாணவர்களுக்கு தேர்வு எழுத முடியவில்லை. மேலும் இதில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு பணம் செலுத்தாமல் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். மறு தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.