Union Minister Rajnath Singh says People of Pakistan-occupied Kashmir are ours

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா கடந்த மே 7ஆம் தேதி நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது. மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை எல்லை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக கடந்த 10ஆம் தேதி இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. அதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்களை இன்னும் அதிகமாக செய்திருக்கலாம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) தொடக்க விழா நடைபெற்றது. அந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “முதலில் பயங்கரவாத மறைவிடங்களையும், பின்னர் எதிரியின் விமானத் தளங்களையும் எவ்வாறு அழித்தோம் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். நாங்கள் இன்னும் அதிகமாகச் செய்திருக்கலாம், ஆனால் அதிகாரத்துடன் நிதானமும் வர வேண்டும்.

Advertisment

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பயங்கரவாதத் தொழிலை நடத்துவதால் ஏற்படும் பெரும் விலையை பாகிஸ்தான் இப்போது உணர்ந்துள்ளது. இனிமேல், பேச்சுவார்த்தைகள் நடக்கும் போதெல்லாம், அவை பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும். வேறு எந்தப் பிரச்சினையிலும் பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இருக்காது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் எங்களுடையவர்கள். அவர்கள் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியினர். இன்று புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எங்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் எங்கள் சகோதரர்கள். ஒரு நாள் நிச்சயமாக சுயமரியாதையுடனும், தங்கள் சொந்த விருப்பத்துடனும் இந்திய நீரோட்டத்திற்குத் திரும்புவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று கூறினார்.