Union Minister Amit Shah says persons  handed over after DNA testing

Advertisment

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் இன்று (12.06.2025) மதியம் லண்டன் நோக்கிச் செல்ல முற்பட்டது. அப்போது இந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் செயல் இழப்பால் விமானம் புறப்பட்ட 5வது நிமிடத்திலேயே விபத்தில் சிக்கியது. அதாவது விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகள் இருந்த நிலையில் இதுவரை 204 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய உயிரிழந்தவர்களில் உடல்களில் பெரும்பாலானவை கருகிய நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழலில் தான் அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் ஏ.என்.ஐ. (ANI) செய்தி நிறுவனத்திடம் தொலைபேசியில் பேசுகையில், “விமானத்தின் 11 ஏ இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் என்ற ஒருவர் உயிர் பிழைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மருத்துவமனையில் உயிர் பிழைத்திருந்த நிலையில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் சிகிச்சையில் உள்ளார்.

விமான விபத்தின் போது ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. விபத்துக்குள்ளான விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும்” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் விமான விபத்து நடந்த இடத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் மற்றும் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோரும் உடன் இருந்தனர்.

Advertisment

இதனையடுத்து இந்த விமான விபத்து தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில், ஆலோசனைக் கூட்டமும் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து உயிர் பிழைத்த ஒரே நபராகக் கருதப்படும் காயமடைந்த விஸ்வாஸ் குமாரைய்ம், சிகிச்சையில் உள்ள மற்றவர்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளார்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “இன்று மதியம் ஏர் இந்தியா விமானம் ஏ.ஐ. 171 விபத்துக்குள்ளானது. இதில் பல பயணிகள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Union Minister Amit Shah says persons  handed over after DNA testing

ஒட்டுமொத்த தேசமும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி துயரமடைந்தவர்களின் குடும்பங்களுடன் அரசு இணைந்து துணை நிற்கிறது. இந்த விபத்து நடந்த 10 நிமிடங்களுக்குள் மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. குஜராத் முதல்வர், உள்துறை அமைச்சர் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரை நான் தொடர்பு கொண்டேன். சிறிது நேரத்திலேயே பிரதமரும் அழைத்தார். அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு துறைகளும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த விமானத்தில் 230 பயணிகளும் 12 பணியாளர்களும் இருந்தனர். இதில் உயிர் பிழைத்த ஒருவருக்கு சில நல்ல செய்திகள் உள்ளன. டி.என்.ஏ. சரிபார்ப்புக்குப் பிறகு இறப்பு எண்ணிக்கை குறித்து அறிவிக்கப்படும். உயிர் பிழைத்த ஒருவரை நான் சந்தித்தேன்.

Advertisment

ஒவ்வொரு துறையும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. விமானம் கிட்டத்தட்ட ஒரு லட்டத்து 25 ஆயிரம் லிட்டர் எரிபொருளை சுமந்து சென்றது. அதிக வெப்பநிலை காரணமாக யாரையும் காப்பாற்ற வாய்ப்பில்லை. விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டேன். இறந்த உடல்களை மீட்கும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 1000 டி.என்.ஏ சோதனைகள் செய்யப்படும். இறந்த உடல்களின் டி.என்.ஏ. மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. டி.என்.ஏ. பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் ஒப்படைக்கப்படும். விபத்து தொடர்பான மறு ஆய்வுக் கூட்டத்தில், ஒவ்வொரு அம்சமும் விவாதிக்கப்பட்டது. விசாரணையை விரைவாக மேற்கொள்ளுமாறு விமானப் போக்குவரத்து அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்” எனத் தெரிவித்தார்.