AJAY MISHRA

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், கடந்த ஆண்டு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆஷிஸ் மிஸ்ரா அந்த சமயத்தில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் ஒருவரும் பாஜகவைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் கீழ், இந்த விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 14 பேருக்கு எதிராக 5000 பக்க குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

இந்தச்சூழலில் அலகாபாத் உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஆஷிஸ் மிஸ்ரா சில நாட்களுக்கு முன்னர் சிறையிலிருந்து வெளியே வந்தார். இந்தநிலையில் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து லக்கிம்பூரில் கார் ஏறியதில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர்கள், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Advertisment

இந்தநிலையில் உத்தரப்பிரதேசத்தின் நான்காம் கட்ட தேர்தலில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, பாதுகாப்புப் படை வீரர்கள் புடைசூழ வந்து வாக்களித்தார். வாக்குச் சாவடிக்கு வரும்போதும், வாக்களித்துவிட்டுச் செல்லும்போதும் செய்தியாளர்களைச் சந்திப்பதையும் அஜய் மிஸ்ரா தவிர்த்தார். இது சமூகவலைதளங்களில் பேசுபொருளான நிலையில், விவசாயிகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதாலேயே அஜய் மிஸ்ரா பாதுகாப்புப் படை வீரர்கள் புடைசூழ வாக்களிக்க வந்ததாகக் கூறப்படுகிறது.