Skip to main content

அதிகரிக்கும் கரோனா - தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

union home ministry

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அண்மையில் அதிக கரோனா பாதிப்புகளைப் பதிவு செய்து வரும் தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் டெல்லி, குஜராத்தின் அகமதாபாத், ராஜ்கோட் மற்றும் சூரத், ஜார்க்கண்டின் ராஞ்சி, கர்நாடகாவின் பெங்களூரு நகர்ப்புறம், ஹரியானாவின் குர்கான், தமிழ்நாட்டின் சென்னை, மகாராஷ்டிராவின் மும்பை, மும்பை புறநகர், புனே, தானே மற்றும் நாக்பூர் மற்றும் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா ஆகிய நகரங்களில் கரோனா பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களில் அதிகரித்திருப்பதை ராஜேஷ் பூஷன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும், இந்த மாநிலங்கள் சிலவற்றில் கரோனா பாதிப்புகளைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், "தொற்று மேலும் பரவாமல் இருப்பதை உறுதி செய்யவும்,  தாமதமாக பாதிப்புகள் கண்டறியப்படுவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் நிலையை எட்டுவதைத் தவிர்க்கவும், கரோனா பாதிப்புகளைக் கண்டறிவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சரி செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

 

தொடர்ந்து ராஜேஷ் பூஷன் அந்த கடிதத்தில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மேம்படுத்தப்பட்ட சோதனை போன்ற உடனடி நடவடிக்கைகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், விரைவாகச் செயல்பட்டு கரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்தி சோதனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர், தற்போதுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறையின்படி, கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கவும், மருத்துவமனை அளவிலான தயார்நிலையை வலுப்படுத்தவும் தொற்று பரவுவதைத் தடுக்க கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஒருவரிடம் இருந்து 18 பேருக்கு பரவும் தன்மை; அடுத்த 40 நாட்கள் மிக முக்கியமானது’ - சுகாதாரத்துறை தகவல்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022
'One-to-18 transmission; next 40 days critical' - health department shock

 

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளை வாங்கியது. அதன் பிறகு தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை மூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் ‘பி.எஃப்.7’ என உருமாறி அதன் புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்தியாவிலும் புது வகை கொரோனா பரவல் தொடர்பான அச்சம் மேலோங்கி வரும் நிலையில், மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் காரணமாக மாநிலங்களில், குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் தீவிரக் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

 

இந்த நிலையில், இந்தியாவில் புதுவகை கொரோனா பரவலைத் தடுப்பதில் அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தது என சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரும் ஜனவரி மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை கருதுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா அலை ஒன்று, இரண்டு ஆகியவற்றின் போக்குகளின் அடிப்படையில் இந்தக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

கடந்த சில நாட்களில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வகை கொரோனா மனிதர்களிடையே தொற்றும் விகிதம் அதிகமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்பிருந்த கொரோனா தொற்றுகள் ஒருவரிடம் இருந்து சராசரியாக 5 முதல் 6 பேருக்கு பரவும் வேகத்தைக் கொண்டிருந்த நிலையில், தற்போது பரவி வரும் புது வகை ‘பி.எஃப்.7’ கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 10 முதல் 18 பேருக்கு பரவும் எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

 

 

Next Story

இந்தியாவில் ஒமைக்ரான் XE  தொற்று உறுதி!

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

 Omicron XE infection confirmed in India!

 

இந்தியாவில் பல மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்து நாடுகளுக்கான விமான சேவையை இந்திய அரசு தொடங்கியிருந்தது. இந்நிலையில் மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பான தகவலை மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் XE என்ற புதிய வகை கரோனா தொற்று 10 மடங்கு வேகமாக பரவும் வைரஸ் என்றும், சீனாவில் இந்த புதிய வகை தொற்று பாதிப்பு இருந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக ஒமைக்ரான் XE உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் XE தொற்று முதலில் பிரிட்டன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் பரவல் சீனாவிலேயே அதிகம் இருந்தது. இதனால் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் மும்பை நகரில் ஒமைக்ரான் XE  உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.