பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

 Union Cabinet approved the budget

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கும் ஆய்வறிக்கை இதுவாகும்.

இதனையொட்டி 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். பிரதமராக மோடி 3வது முறையாக பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். எனவே இந்த பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கான வரிச்சலுகைகள், புதிய அறிவிப்புகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 Union Cabinet approved the budget

இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் நகலை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் அளித்து ஒப்புதலை பெற்றார். அதே சமயம் பட்ஜெட் உரையை பெற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரை நிகழ்த்த உள்ளார்.

budget
இதையும் படியுங்கள்
Subscribe