Uddhav Thackeray challenges Eknath Shinde on siva sena 59th foundation day

மகாராஷ்டிராவில் கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பு வகித்தார். இரண்டரை ஆண்டுக்கு பின், சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டனர்.

இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, சிவசேனா என்ற கட்சி ஏக்நாத் ஷிண்டே வசமானது. உத்தவ் தாக்கரே சிவசேனா அணி என்ற பெயரோடு உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

Advertisment

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாரும் துணை முதல்வர்களாகவும் பதவி வகித்து வருகின்றனர்.

Uddhav Thackeray challenges Eknath Shinde on siva sena 59th foundation day

இந்த நிலையில், துரோகிகள் என்னைக் கொல்லுங்கள் என்று ஏக்நாத் ஷிண்டேவுக்கு உத்தவ் தாக்கரே மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவசேனா கட்சியின் 59வது நிறுவன நாள் மகாராஷ்டிராவில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு உத்தவ் தாக்கரே பேசியதாவது, “1991ஆம் ஆண்டு வெளியான பிரஹார் திரைப்படத்தில் நானா படேகர் ஒரு ரவுடிகள் கூட்டத்தின் மத்தியில் நின்று, ‘வாருங்கள், என்னைக் கொல்லுங்கள்’ என்று கூறுவார். அது போலவே, நான் இங்கே இங்கே இந்த துரோகிகளுக்கு முன்னால் நின்று, வாருங்கள், என்னைக் கொல்லுங்கள் என்று சொல்கிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னை நோக்கி வாருங்கள். ஆனால் வரும் போது திரிசூல் படத்தில் நடித்த அமிதாப் பச்சன் போல் ஆம்புலன்ஸை கொண்டு வாருங்கள், ஏனென்றால் அது உங்களுக்கு தேவைப்படும்” என்று தெரிவித்தார்.

Advertisment

உத்தவ் தாக்கரேவுக்கு பதிலளித்த மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “உத்தவ் தாக்கரே அரசியல் துரோகி. அதிகாரத்திற்காக பாலாசாகேப் தாக்கரேவின் சிந்தாந்தத்தை கைவிட்டார். மகா விகாஷ் அகாதி கூட்டணி மூலம் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இந்துத்துவா என்ற கொள்கையை கைவிட்டார். பாலாசாகேப் உயிரோடு இருந்திருந்தால், அத்தகைய துரோகத்திற்காக உத்தவ் தாக்கரேவை அவர் தண்டித்திருப்பார். அவர் என்னைக் கொல்லுங்கள் என்கிறார். ஆனால், அரசியல் ரீதியாக இறந்துவிட்ட ஒருவரை எப்படி கொல்ல முடியும்?. நாங்கள் யாரையும் தூண்டிவிடவில்லை, ஆனால் தூண்டிவிடப்பட்டால் நாங்கள் யாரையும் விடமாட்டோம்” என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இது தற்போது மகாராஷ்டிரா அரசியல் பேசுபொருளாக மாறி வருகிறது.