காஷ்மீரில் நடக்கும் கலவரங்கள் குறித்து பாகிஸ்தான் வீரர் சாகித் அஃப்ரிடி வெளியிட்ட கருத்துக்கு, இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பதிலடி தந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 13 தீவிரவாதிகள், 4 உள்ளூர்வாசிகள் மற்றும் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பயங்கரமான மற்றும் துயரகரமான சூழல் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவுகிறது. சுதந்திரம் மற்றும் சுய உறுதிக்கான குரல்களை வீழ்த்த ஆதிக்க அரசால் அப்பாவிகள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். இந்த நேரத்தில் ஐநா மற்றும் அதன் கிளை அமைப்புகள் எங்கே போயின? இந்த ரத்த வெறியாட்டத்தை நிறுத்த அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், ‘காஷ்மீர் மற்றும் ஐநா குறித்து அஃப்ரிடி தெரிவித்திருக்கும் கருத்து பற்றி மீடியாக்கள் என் தரப்பு விவாதங்களை கேட்கின்றன. என்ன சொல்வதற்கு இருக்கிறது? ஐநா (UN) என்பது அவரது பொய்யான அகராதியில் UNDER NINTEEN (19 வயதுக்குட்பட்டவர்கள்) என்றுதான்அர்த்தம். அவருக்கும் வயது அவ்வளவுதான். நோ-பாலில் விழுந்த விக்கெட்டுக்குக் கொண்டாடும் அஃப்ரியைப் பற்றியெல்லாம் மீடியாக்கள் கவலைப்பட வேண்டாம்’ என பதிவிட்டிருந்தார்.
2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை நடந்துகொண்டிருந்த சமயத்தில், பாகிஸ்தானில் உள்ள ஏராளமான மக்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்தான் என பதிவிட்டிருந்தது சர்ச்சைக்குள்ளானது.