Skip to main content

"அரசாங்கத்தின் அழுத்தத்தால் எனது குரலை அடக்க ட்விட்டர் முயற்சிக்கிறது" - பராக் அகர்வாலுக்கு ராகுல் காந்தி பரபரப்பு கடிதம்

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

rahul gandhi

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ட்விட்டரின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக அண்மையில் நியமிக்கப்பட்ட பராக் அகர்வாலுக்கு எழுதியுள்ள கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. டிசம்பர் 27 எனத் தேதியிடப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் ராகுல் காந்தி, மத்திய அரசின் அழுத்தத்தால் ட்விட்டர் தனது குரலை மௌனிக்கச் செய்ய முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

தனது ட்விட்டர் கணக்கைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை, தினமும் சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம்வரை அதிகரித்து வந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தனது ட்விட்டர் கணக்கை புதிதாகப் பின்பற்றுபவர்களின் மாதாந்திர சராசரி குறைந்து, பூஜ்யத்தை நெருங்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.

 

மேலும் அவர், "எனது குரலை அடக்க அரசாங்கம் பெரும் அழுத்தம் தருவதாக, ட்விட்டர் இந்தியாவில் உள்ளவர்கள் என்னிடம் நம்பத்தகுந்த மற்றும் எச்சரிக்கையான வகையில் தெரிவித்தனர். எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லாமல், எனது கணக்கு சில நாட்கள் முடக்கப்பட்டது. அரசாங்கத்தின் ட்விட்டர் கணக்குகள் உட்பட இன்னும் சில கணக்குகள், (நான் பதிவிட்ட) அதே நபர்களின், அதேமாதிரியான புகைப்படங்களைப் பதிவிட்டன. அந்தக் கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை. எனது கணக்கு மட்டும் தனியாக குறிவைக்கப்பட்டது. இந்தியா என்ற கொள்கையை அழிப்பதில் ஒரு சிப்பாயாக ட்விட்டர் ஆக அனுமதிக்கப்படக்கூடாது எனக் கோடிக்கணக்கான இந்தியர்கள் சார்பில் இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்தச்சூழலில், தற்போது ட்விட்டர் நிறுவனம், இந்தக் கடிதம் தொடர்பாக விளக்கமளித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், "மேனிப்புலேஷன்  மற்றும் ஸ்பேம் ஆகியவற்றிற்கு ட்விட்டர் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையைக் கொண்டுள்ளது. ஸ்பேம் மற்றும் ஆபத்தான ஆட்டோமேஷனை நாங்கள் மூலோபாய ரீதியாகவும், செயற்கை நுண்ணறிவு மூலமும் எதிர்த்துப் போராடுகிறோம், மேலும் ஆரோக்கியமான சேவை மற்றும் நம்பகமான கணக்குகளை உறுதி செய்வதற்கான நிலையான மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம். மேனிப்புலேஷன்  மற்றும் ஸ்பேம் ஆகியவற்றின் மீதான எங்கள் கொள்கைகளை மீறுவதால் ஒவ்வொரு வாரமும் கோடிக்கணக்கான கணக்குகளை அகற்றி வருகிறோம்" எனக் கூறியுள்ளார்.

 

ஆனால் ராகுல் காந்தி தரப்பு இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளது. ராகுல் காந்தி அலுவலகத்தின் டிஜிட்டல் தகவல்தொடர்பு பொறுப்பாளர். "இது ஒரு முழுமையான விளக்கமோ அல்லது திருப்திகரமான பதிலோ அல்ல. நிகழ்வுகளின் காலவரிசை ட்விட்டரின் கூற்றுகளை உறுதிப்படுத்தவில்லை" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.

Next Story

பா.ஜ.க வேட்பாளர் வெற்றி; “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் வந்துவிட்டது” - ராகுல் காந்தி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உள்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi says The true face of a dictator has come back on BJP candidate wins

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வந்துவிட்டது. பாபா சாகேப் அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதற்காக, மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிப்பது மற்றொரு படியாகும். மீண்டும் சொல்கிறேன், இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் அல்ல, நாட்டைக் காப்பாற்றும் தேர்தல், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் தேர்தல்” என்று பதிவிட்டுள்ளார்.