Skip to main content

சிக்கலில் ட்விட்டர் - இந்தியாவில் சட்டப்பாதுகாப்பை இழக்கிறது!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

twitter

 

சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி ஒருசாரார் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததுவந்தனர். அதேபோல் ஓடிடி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்துவந்தது. மேலும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, சமூகவலைதளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் புதிய விதிகளை அறிவித்தது. இந்தப் புதிய விதிகளை ஏற்றுக்கொள்வதற்கான அவகாசம் கடந்த 26ஆம் தேதியோடு முடிவடைந்தது.

 

சமூகவலைதளங்களில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. ட்விட்டர் நிறுவனம் மட்டும் விதிகளை முழுமையாக ஏற்கவில்லை. சமூகவலைதளங்கள், தலைமை இணக்க அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்; நிறுவன ஊழியர் ஒருவரை குறைதீர்க்கும் அதிகாரியாக நியமிக்க வேண்டும்; நோடல் தொடர்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பன மத்திய அரசின் விதிமுறைகளில் ஒன்றாகும். இதில் ட்விட்டர் இன்னும் தலைமை இணக்க அதிகாரியை நியமிக்கவில்லை.

 

இதனைத்தொடர்ந்து அண்மையில் மத்திய அரசு, ட்விட்டர் நிறுவனத்துக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில் "நல்லெண்ண நடவடிக்கையாக, விதிகளுக்கு உடனடியாக இணங்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு கடைசி அறிவிப்பு வழங்கப்படுகிறது. இணங்கத் தவறினால், 2000ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஐ.டி சட்டத்தின் 79ஆம் பிரிவின்கீழ் ட்விட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்படும் விலக்குத் திரும்பப் பெறப்படும். மேலும் தண்டனைச் சட்டம் பாயும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐ.டி சட்டம் 2000த்தின் 79ஆம் பிரிவின்படி, பயனர்கள் பதிவிடும் பதிவுகளுக்கு சமூகவலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நோட்டீஸ் தொடர்பாக அண்மையில் விளக்கமளித்த ட்விட்டர் நிறுவனம், புதிய விதிகளுக்கு இணங்குவது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறியது. இந்தநிலையில், ட்விட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சட்டப்பாதுகாப்பு, அதாவது ஐ.டி சட்டத்தின் 79ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள விலக்கை மத்திய அரசு திரும்பப் பெறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த சட்டப்பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டால், பயனர்களின் கருத்துக்கு ட்விட்டர் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும். மேலும் பயனர்களின் கருத்துக்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகளின் அக்கவுண்ட்டை முடக்க மத்திய அரசு உத்தரவு; எக்ஸ் நிறுவனம் அதிருப்தி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Company X is dissatisfied for Central government order to freeze pages

தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

பஞ்சாப் - ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில், நேற்று (21-ஆம் தேதி) காலை முதல் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் ஹரியானா போலீசார், விவசாயிகளைக் கலைத்து வருகின்றனர். காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி உயிரிழந்தார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அரசின் உத்தரவின் பேரில் சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக எக்ஸ் (ட்விட்டர்) இன்று (22-02-24) தெரிவித்துள்ளது. 

இது குறித்து, எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் உலக அரசுகள் விவகார பிரிவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க, குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை இந்தியாவில் மட்டும் நிறுத்தி வைப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், கருத்து சுதந்திரம் என்பது இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். 

எங்கள் நிலைப்பாட்டிற்கு இணங்க இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. எங்கள் கொள்கையின்படி, பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம். சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய அரசின் நிர்வாக உத்தரவுகளை வெளியிட முடியவில்லை. ஆனால், வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்த உத்தரவை பொதுவெளியில் வைப்பது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. 

Next Story

முடங்கியது 'எக்ஸ்'

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
 Disabled 'X'

உலக அளவில் எக்ஸ் எனும் ட்விட்டர் இணையதளம் முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல பணக்காரரான எலான் மஸ்க்கால் வாங்கப்பட்ட பிறகு பல்வேறு பிரச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது ட்விட்டர். டிவிட்டருக்கு எக்ஸ் (x ) என பெயர் மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது 'x' வலைத்தளமானது உலகம் முழுவதும் முடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பல கோடி பயனர்கள் அவதியுற்று வருகின்றனர்.