ADVERTISEMENT

ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

12:12 PM May 17, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தன்னிறைவு இந்தியா எந்த என்ற திட்டத்தின் கீழ், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 4 நாட்களாக திட்டங்கள் குறித்த அம்சங்களை விளக்கி வருகிறார். இந்நிலையில் டெல்லியில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து இந்த திட்டத்திற்கான இறுதிகட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி இன்று நிலம், தொழிலாளர் நலன், பணப்புழக்கம், சட்டங்கள் ஆகியவை தொடர்பான திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது.
100 நாள் வேலைத்திட்டம், மருத்துவம் மற்றும் கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட ஏழு அறிவிப்புகள் இன்று வெளியாக இருக்கின்றன. கரோனா வர்த்தக நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளும் இன்று வெளியாகின்றன.


இதுதொடர்பாக அவர் கூறியதாவது , " மத்திய, மாநில அரசுகளுடன் உணவு கழகமும் இணைந்து மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும். ஏழைகளுக்கு ரேஷன் பொருட்களை கொண்டு சேர்த்த மாநில அரசுகளை பாராட்டுகிறேன். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனாளிகளுக்கு நேரடியாக உதவி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 8.19 கோடி விவசாயிகளுக்கு 2000 கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கி கணக்கு உள்ள 20 கோடி பெண்களுக்கு 10025 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல 85% கட்டணத்தை மத்திய அரசே ஏற்கிறது.

கரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு 4,113 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு ஏற்கனவே 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவச உடைகளை தயாரிக்கும் 300 நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 11006 கோடி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 87 லட்சம் n95 முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. நோய்கள் மருந்துகள் பற்றிய ஆராய்ச்சிகளும் ஊக்குவிக்கப்படும் .

பள்ளிக்கல்விக்கு ஏற்கனவே மூன்று தொலைக்காட்சி அலைவரிசைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் 12 அலைவரிசைகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கல்வி கற்க தேவையான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. டிடிஹெச் நிறுவனங்கள் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் பள்ளி தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும். ஆசிரியர்கள் மாணவர்கள் இடையேயான உரையாடல் புதிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்.


ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு டிவி சேனல் தொடங்கப்படும். 1 முதல் 12 வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் தொடங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான மின் பாடங்கள் உருவாக்கப்படும். ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இ-வித்யா என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மே 30 முதல் ஆன்லைன் படிப்புகள் தொடங்குவதற்கு நூறு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

கரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்யும் வகையில் நிறுவனங்கள் திவாலாவது தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்படும். நிறுவனங்கள் மீதான 7 விதி மீறலுக்கான நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன. 5 விதிமீறல்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்தி சார்ந்த துறை தவிர அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் தனியார் பங்களிப்பிற்கு அனுமதி அளிக்கப்படும். உத்தி சார்ந்த துறைகளில் ஒரே ஒரு நிறுவனத்தைத் தவிர மற்ற அனைத்து பொதுதுறைகளிலும் தனியார் நிறுவனங்கள் பங்களிப்புக்கு அனுமதி வழங்கப்படும்.



மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட கடன் வரம்பில் 14% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வருவாய் பங்கீட்டில் மாநிலங்கள் பிரச்சினையை சந்தித்து வருகின்றன. மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் போது மாநில அரசுகள் நிதியை தொடர்ந்து கொடுத்து உதவும்.கரோனா நடவடிக்கைக்காக சுகாதாரத் துறையில் இருந்து 4,113 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு உயர்த்தப்படுவதன் மூலமாக 4.26 லட்சம் கோடி கூடுதல் நிதி மாநிலங்களுக்கு கடன் கிடைக்கும்" என்றார்.

மொத்தமாக 20 லட்சம் கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ள தன்னிறைவு இந்தியா திட்டத்திற்கு ஒவ்வொரு கட்டமாக அறிவிக்கப்பட்ட தொகைகள் அடிப்படையில், முதல் கட்டத்திற்கு 5,94,550 கோடியும், இரண்டாம் கட்டத்திற்கு 3,10,000 கோடியும் மூன்றாம் கட்டத்திற்கு 1,50,000 கோடியும் நான்கு மற்றும் ஐந்தாம் கட்டத்திற்கு மொத்தமாக 48,100 கொடியும் செலவிடப்பட்டுள்ளது. மொத்தம் 20.97 லட்சம் கோடி ரூபாய் செலவில் இந்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT