Skip to main content

அரசு மருத்துவமனையில் பணியில் அமர்ந்த திருநங்கைகள்; இது எங்கள் வாழ்வில் ஒரு மைல்கல் என பெருமிதம்

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

Transgenders employed in government hospitals; This is a proud milestone for us

 

அரசு மருத்துவமனை அதிகாரிகளாக இரண்டு திருநங்கைகள் பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளனர்.

 

திருநங்கைகளான டாக்டர் ரூத் ஜான் மற்றும் டாக்டர் ப்ராச்சி ரத்தோர் ஆகியோர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒஸ்மானியா மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருநங்கைகள், சமூகத்தில் சமநீதி கேட்டு போராடும் சூழ்நிலையில் இந்தப் பணி நியமனம் திருநர் சமூகத்தின் சமநீதி போராட்ட வரலாற்றில் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

 

2018ல் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த ரூத் தற்போது தான் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “எனக்கும் என் சமூகத்திற்கும் இது மிகப்பெரிய விஷயம். நான் இதை உண்மையாகவே எதிர்பார்க்கவில்லை. நான் பட்டம் பெற்ற பின் தற்போது வரை நிராகரிக்கப்பட்டுள்ளேன்” என்றார்.

 

மறுபுறம் டாக்டர் ப்ராச்சி பட்டம் பெற்ற உடன் தனியார் மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். எனினும் எந்த மருத்துவமனையிலும் அவர் அதிக காலம் பணிபுரியவில்லை. சில நாட்களிலேயே பணியில் இருந்து விடுபடுமாறு கூறுவதால் எந்த மருத்துவமனையிலும் அதிக காலம் பணிபுரியவில்லை என ப்ராச்சி கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. திருநங்கைக்கு நேர்ந்த கொடூரம்; சென்னையில் பயங்கரம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
The brutality of a transgender who worked in IT; Terrible in Chennai

குழந்தையைக் கடத்த வந்த நபர் எனத் திருநங்கை ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி இருந்தது. இந்த சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் திருநங்கை ஒருவர், பம்மல் மூங்கில் ஏரிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு நேர உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளார். பின்னர் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு தனியாகச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்தப் பகுதியில் இருந்த நபர்கள் சிலர் திருநங்கையைப் பார்த்தவுடன் அவர் குழந்தைகளைக் கடத்த வந்தவர் எனப் பேசிக்கொண்டே அவரை நெருங்கினர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருநங்கையோ 'தான் இந்த பகுதியில் தான் வசித்து வருகிறேன்' எனத் தெரிவித்தார். இருப்பினும் விடாத அந்த நபர்கள், அவரைத் தாக்கியதோடு அரை நிர்வாணப்படுத்தி அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர்.

அந்த பகுதியில் இருந்த சில நபர்களும் திருநங்கையைக் கொடூரமாகத் தாக்கினர். இந்த தகவல் சங்கர் நகர் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் மின் கம்பத்தில் கட்டப்பட்ட திருநங்கையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். திருநங்கை ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பரவிய நிலையில், வீடியோ பதிவு அடிப்படையில் முருகன், நந்தகுமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோகன், அசோக்குமார் என்பவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்மையில், சென்னையில் குழந்தை கடத்தும் கும்பல் ஒன்று குழந்தைகளைக் கடத்தி உடல் உறுப்புகளை அறுத்து எடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் பரவிய நிலையில், அந்த வீடியோவில் குழந்தைகளை கடத்தும் நபர் போலவே திருநங்கை இருந்ததால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோவில், ''நீ தான இது" என நபர்கள் சிலர் மொபைலில் உள்ள வீடியோவை காட்டி கேள்வி எழுப்பினர். ஆனால் திருநங்கை 'அது நான் இல்லை' என சொல்லியும் கேட்காமல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story

நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்த பெண்; நம்பிச் சென்ற பா.ஜ.க பிரமுகருக்கு நேர்ந்த கொடூரம் 

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
The incident that happened to a trusted BJP administrator in telungana

தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் நகரில் உள்ள சிங்கப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு(36). தொழிலதிபரான இவர், சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.க. கட்சியில் இணைந்திருக்கிறார்.

இந்த நிலையில், யூசுப்குடா பகுதியில் ராமு பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார். அவருடைய அந்தரங்க உறுப்புகளிலும் காயங்கள் இருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பிணமாகக் கிடந்த ராமுவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அங்கு இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், கொலை செய்யப்பட்ட ராமுவின் செல்போன் அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். அதில், சம்பவம் நடந்த அன்று நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் ராமுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டது தெரியவந்தது. அதன் பேரில், அந்த செல்போன் எண்ணைக் கொண்டு, அந்த பெண்ணைப் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், அந்த பெண் ராமுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யூசப்குடா பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, இரவு நேரத்தில் ராமு அவருடைய வீட்டுக்குச் சென்றபோது, அந்த பெண் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் ராமுவை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

மேலும், இந்த சம்பவத்தில் பா.ஜ.க பிரமுகரும் தொழிலதிபருமான ராமுவின் முன்னாள் நண்பரான மணிகண்டன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்த நிலையில், தலைமறைவான அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சமீபத்தில் ராமுவுக்கும் மணிகண்டனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதில் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.