ADVERTISEMENT

மூட நம்பிக்கையால் 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

03:38 PM Jan 25, 2024 | mathi23

டெல்லியைச் சேர்ந்த தம்பதி தனது 5 வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளனர். அந்த சிறுவன் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால், சிறுவனின் பெற்றோர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், நேற்று (24-01-24) டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவாருக்கு புனித நீராடுவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளனர். அவர்களுடன், உறவுக்காரப் பெண் ஒருவரும் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர்கள், அங்குள்ள கங்கை நதியில் நீராடினால் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மகன் மீண்டு விடுவான் என நம்பிய சிறுவனின் பெற்றோர், சிறுவன் கங்கை நதியில் நீராடத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி அந்த உறவுக்காரப் பெண், சிறுவனை 5 நிமிடத்திற்கு மேலாக நீரில் மூழ்கடித்தபோது, அவனது பெற்றோர் பிரார்த்தனை செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், அந்த சிறுவனை தண்ணீரில் இருந்து வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது, அந்த உறவுக்காரப் பெண் அவர்களுடன் சண்டையிட்டுள்ளார். ஆனாலும், அதையும் மீறி அங்குள்ளவர்கள் சிறுவனை தண்ணீரிலிருந்து வெளியே தூக்கி முதலுதவி கொடுக்க முயன்றனர். ஆனால், அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது அவர்களுக்குத் தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவுக்காரப் பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT