TN govt files petition in Supreme Court against Central Govt

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை.” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதியும், தமிழ்நாட்டிற்கு ‘சமக்ர சிக்‌ஷா’ திட்டத்தின் கீழ் வரவேண்டிய நிதிகளை மத்திய அரசு உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது பி.எம். ஸ்ரீ திட்டம், சமக்ர சிக்ஷா அபியான் திடத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது சட்ட விரோதம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத காரணத்தால் மாணவர்களுடைய நலனுக்காக வழங்கப்பட வேண்டிய நிதியை நிறுத்தி வைப்பது என்பது சட்ட விரோதம் ஆகும்.

Advertisment

இது போன்ற மாணவர்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 2 ஆயிரத்து 291கோடி ரூபாயை விடுவிப்பதற்கான உத்தரவை மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத ஒரே காரணத்திற்காக மாநில அரசிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைப்பது என்பது அரசியலமைப்பு பிரிவுகளுக்கு எதிரான செயலாகும்” ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உச்சநீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.