Skip to main content

பிளவுவாதிகளின் தலைவர் மோடி!  -கடுமையாக விமர்சித்த டைம் இதழ்!

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னமும் இரண்டே கட்ட வாக்குப்பதிவு வேலைகள் மீதமிருக்கின்றன. மோடியே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பாரா? அல்லது ராகுல்காந்தி ஆட்சியைக் கைப்பற்றுவாரா? என்ற விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
 

times magazine modi


இந்தவேளையில், உலகப்புகழ்பெற்ற டைம் இதழின் மே-20 தேதியிட்ட வெளியீட்டில், மோடியை விமர்சித்து அட்டைப்பட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்தக் கட்டுரைக்கு, ‘இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவன்’ என்ற தலைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அட்டைப்படத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.

இந்தக் கட்டுரையை எழுதியிருக்கும் ஆடிஸ் தஸீர், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அழைக்கப்படும் இந்தியா, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிளவுபட்டுக் கிடக்கிறது” என குறிப்பிட்டிருக்கிறார். மோடி ஆட்சியின் கீழான இந்த ஐந்து ஆண்டுகளில் பசு குண்டர்கள் தாக்குதல், 2017-ல் உபி முதல்வராக யோகி ஆதித்யநாத்தை முதல்வராக ஆக்கியது, போபால் பா.ஜ.க. வேட்பாளராக சாத்வி பிரக்யா சிங்கை நிறுத்தியது என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் குறித்து விவரித்திருக்கிறார்.

ஆடிஸ் தனது கட்டுரையில் எதிர்கட்சியான காங்கிரஸையும் விட்டு வைக்கவில்லை. மிக மோசமான கூட்டணியை அமைத்தது, கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது இணக்கமான சூழலை ஏற்படுத்தாதது என சில விஷயங்கள் குறித்தும், ராகுல்காந்தியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதேசமயம், இதே தேதியிட்ட டைம் இதழில் , “இந்தியப் பொருளாதார சீர்திருத்தத்தின் மாபெரும் நம்பிக்கை” என்ற இன்னொரு கட்டுரையும் வெளியாகி இருக்கிறது.

இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டில் மோடி உடனான நேர்காணல் தொடர்பான அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டது டைம் இதழ். ஆன்லைன் வாசகர்களுக்காக நடத்திய கருத்துக்கணிப்பிலும் மோடி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

“மோடி ஆட்சியைப் பிடித்த ஓராண்டுக்குள் வெளியான அட்டைப்படக் கட்டுரையும், தற்போது வெளியாகி இருக்கும் இந்த கட்டுரையும் நேரெதிரானவை. சரியான சமயத்தில் இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது” என பலரும் கருத்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.