![HARSHA](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZghL0ZQGIAXxUfH9SdG5kii5UY5NFcmgFF5I-kYHfnA/1645512341/sites/default/files/inline-images/fgerg.jpg)
கர்நடாகவில் ஹிஜாப் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அம்மாநிலத்தின் ஷிவமோகாவில், பஜ்ரங் தள அமைப்பின் உறுப்பினர் ஹர்ஷா என்பவர் கடந்த ஞாயிறு அன்று இரவு மர்மநபர்களால் கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் ஷிவமோகாவில் வலதுசாரி இயக்கங்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இதனையடுத்து சட்டம் ஒழுங்கை காக்க கர்நாடகா காவல்துறையினர், அங்கு 144 தடையுத்தரவை பிறப்பித்தனர். இந்த தடையையும் மீறி நேற்று ஷிவமோகாவில் வன்முறை வெடித்தது. காவி துண்டு அணிந்தவர்கள் வீடுகள், வணிக நிறுவனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கடைகளையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கியதோடு, சில இடங்களில் தனியார் வாகனங்களுக்கும், காவல்துறையின் வாகனங்களுக்கும் தீ வைத்தனர். காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போரட்டக்காரர்களை கலைத்தனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து இந்த போராட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஹர்ஷா கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், 3 பேரை கைது செய்துள்ளனர். இதனை கர்நாடகாவின் உள்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட ஹர்ஷா மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.