Skip to main content

வாகன ஹாரன்களாக இந்திய இசைக்கருவிகளின் ஒலி கட்டாயம்  - சட்டம் கொண்டுவர மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பரிசீலனை!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

nitin gadkari

 

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று (04.10.2021) மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் 1,678 கோடி செலவில் 206 கிலோமீட்டர் நீளத்தில் உருவாகவுள்ள 12 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்டு, நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். அதனைத்தொடர்ந்து இந்திய இசைக் கருவிகளின் ஒலியை வாகனங்களின் ஹாரன் ஒலியாக ஆக்க சட்டம் கொண்டுவருவது குறித்து ஆலோசித்துவருவதாக கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "ஹார்மோனியம், தபலா போன்ற இந்திய இசைக்கருவிகளின் ஒலியை வாகனங்களின் ஹாரன் ஒலியாக பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கும் சட்டம் ஒன்றைக் கொண்டுவருவது குறித்து நாங்கள் பரிசீலித்துவருகிறோம்” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், ஆம்புலன்ஸ்களிலும், காவல்துறை வாகனங்களிலும் பயன்படுத்தப்படும் சைரனுக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக நிதின் கட்கரி மேலும் கூறுகையில், "ஒரு கலைஞர் ஆகாஷ்வானிக்கு (அகில இந்திய வானொலி) இசை ஒன்றை அமைத்துள்ளார். அந்த இசை ஒருநாள் அதிகாலையில் இசைக்கப்பட்டது. அந்த இசையை ஆம்புலன்ஸ்களில் பயன்படுத்த விரும்புகிறேன். அதனால் மக்கள் இனிமையாக உணருவார்கள். சைரன்கள் முழு அளவில் ஒலிக்கப்படுவது மிகுந்த எரிச்சலூட்டுகிறது. காதுகளையும் அது பாதிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீயாய்ப் பரவிய செய்தி! மாற்றிய ஒன்றிய அமைச்சர்! 

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

The news spread wildly! Union Minister Changed statement

 

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 63ம் ஆண்டு கூட்டம் செப்டம்பர் 12 டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது நிதின் கட்கரி பேசுகையில், “டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க வேண்டும். இது தொடர்பாக இன்று(12-09-2023) மாலை நிதியமைச்சரிடம் கடிதம் கொடுக்க உள்ளேன். மேலும், டீசலுக்கு குட்பை சொல்லுங்கள். தயவு செய்து டீசல் கார்கள் தயாரிப்பை நிறுத்திவிடுங்கள். இல்லையென்றால், டீசல் கார்களை விற்பதற்கு சிரமமாகிவிடும் அளவுக்கு வரியை அதிகப்படுத்துவோம்” என பேசினார்.  

 

இவரின் பேச்சு சர்ச்சையாகி விமர்சனங்கள் எழத் தொடங்கியது. இந்த நிலையில், அமைச்சர் நிதின் கட்கரி தனது எக்ஸ் சமூகவலைத்தளப் பக்கத்தில், “டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10% ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என ஊடகங்களில் செய்திகள் வருகிறது. இதனை உடனடியாக தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசாங்கத்தின் பரிசீலனையில் தற்போது அத்தகைய முன்மொழிவு எதுவும் இல்லை. மேலும், 2070க்குள் கார்பன் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும், ஆட்டோமொபைல் விற்பனையில் விரைவான வளர்ச்சியை அடைய வேண்டும். இதற்கு ஏற்ப, தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளுக்கு தகவமைத்துக் கொள்வது அவசியம். அந்த வகையான மாற்று எரிபொருட்கள் இறக்குமதியில், எரிபொருட்களானது மாற்றுள்ளதாகவும், செலவில் குறைந்தும் இருக்க வேண்டும். இதனுடன், மாசில்லாததாகவும், சுதந்திரமாக இயங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் சி.ஏ.ஜி. அறிக்கை வெளியாகி, விரைவுச் சாலை போடுவதில் ஊழல் நடந்துள்ளது என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன விஷயத்தை மறுத்து அப்படியான திட்டம் எதுவும் இல்லை எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

Next Story

மலைக்கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ்; நடிகர் பாலாவின் நெகிழ்ச்சி செயல்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

Actor Bala gave a free ambulance to the people of the hill village

 

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கடம்பூர், குன்றி மலைவாழ் மக்களின் மருத்துவ தேவைகளுக்காக நகைச்சுவை நடிகர் பாலா, அவரது சொந்த நிதியில் வழங்கிய ஆம்புலன்சு வாகனத்தின் சேவை துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் அம்பிகா சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக ஈரோடு எஸ்பி ஜவகர் கலந்து கொண்டு, இலவச ஆம்புலன்ஸ் சேவையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

 

இதைத்தொடர்ந்து நடிகர் பாலா பேசுகையில் கூறியதாவது: “கடம்பூர் மற்றும் குன்றியை சுற்றியுள்ள 12 கிராமத்தில் 8 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில், இந்த மலைக்கிராமத்தை சுற்றி வசிக்கும் மக்களுக்கு பாம்பு, வன விலங்களால் பாதிப்பு ஏற்பட்டாலோ, உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டாலோ 16 கி.மீட்டர் தொலைவில் இருந்து தான் ஆம்புலன்சு வாகனம் வர வேண்டும். இதையறிந்ததும், இவர்களுக்கு ஆம்புலன்சு வாகனம் வாங்கி தர வேண்டும் என எண்ணினேன். இதற்காக யாரிடமும் நான் பணம் வாங்காமல், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அந்த பணத்தை சேர்த்து இந்த ஆம்புலன்சு வாகனத்தை வாங்கி கொடுத்தேன். இது எனது 2 ஆவது ஆம்புலன்சு வாகனம் ஆகும். நான் இதேபோல் ஆம்புலன்சு வசதியின்றி இருக்கும் குக்கிராமங்கள் மற்றும் மலைக்கிராம மக்களுக்கு 10 ஆம்புலன்சு வாகனம் எனது சொந்த நிதியில் வாங்கி தர முடிவு செய்துள்ளேன்” இவ்வாறு பாலா கூறினார்.