2019 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 41 துணை ராணுவப்படை வீரர்கள் தற்கொலைப் படையின் வெடிகுண்டு தாக்குதலால் பரிதாபமாக பலியாயினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய ராணுவம் சார்பில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. எல்லையில் உள்ள பாலகோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்கள் இந்த தாக்குதலில் அழித்தொழிக்கப்பட்டன என்று இந்திய அரசு தெரிவித்தது. அதன்பிறகு இந்த முகாம்கள் செயல்படாமல் இருந்தன என்று பாகிஸ்தான் தரப்பு தகவல்கள் தெரிவித்தன.

Advertisment

இந்நிலையில், இந்திய விமானப்படை தாக்கிய பாலாகோட் பயங்கரவாத முகாம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது என்று, பயங்கரவாத முகாமின் செயல்பாடு குறித்து உள்துறை இணையமைச்சர் ஜி.கே.ரெட்டி மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த மதத்தின் பெயரில் மூளைச்சலவை நடப்பதாக குற்றம் சாட்டிய அமைச்சர், எல்லைகளை பாதுகாப்பதற்கான தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.